Election 2024

"அரசியலுக்காக மணிப்பூரில் பாஜக கொளுத்திய தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது" - கனிமொழி MP விமர்சனம் !

இந்தியா கூட்டணியின் தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆதரித்து, கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, அசோக் நகர் மூன்றாவது நிழற்சாலை பகுதியில் மக்கள் சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "நாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது ஒரு முறை கூட எட்டி பார்க்காத பிரதமர், தேர்தல் என்றவுடன் வாரத்திற்கு 5 முறை தமிழ்நாடு வந்துள்ளார்.இந்திய மக்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக கூறினார். இதுவரை ஒரு ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனரா?

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறினார்கள். இரண்டு பேருக்கு வேலை வாங்கி கொடுத்து உள்ளனரா என்றால் இல்லை. 300, 400 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த குல கல்வி முறையை மீண்டும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பாஜக கொண்டுவர நினைக்கிறது.

யாரெல்லாம் ஒதுக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொன்னார்களோ, அவர்களெல்லாம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த இட ஒதுக்கீடு மூலம் தற்பொழுது உயர் பதவியில் பொறுப்பு வைத்து வருகின்றனர். பெண்களுக்கு படிப்பு எந்த விதத்திலும் தடைபடகூடாது என்ற காரணத்தினால் புதுமைப்பெண் திட்டம் உருவாக்கப்பட்டது. உயர்கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் திட்டமாக புதுமைப்பெண் திட்ட கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண் பிள்ளைகளுக்கும் திட்டம் உருவாக்கப்பட்ட உள்ளது.

இன்னும் 50 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் மக்கள் தொகையில் 50 சதவீதம் உயர்கல்வி படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பது பாஜக அரசின் இலக்காக உள்ளது. ஆனால் நமது திராவிட மாடல் ஆட்சியில் 60 சதவீதத்திற்கு மேலான மக்கள் உயர்கல்வி படித்து முடித்தவர்கள்.

தனது அரசியல் காரணத்திற்காக பாஜக கொளுத்திய தீ இன்னும் மணிப்பூரில் எரிந்து கொண்டிருக்கிறது. இன்னும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். நம் வீட்டுப் பிள்ளைகள் வெளியே சென்று நிம்மதியாக வீடு திரும்ப வேண்டும் என்றால், நம் நாட்டின் பாதுகாப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றால், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?" -அண்ணாமலையிடம் கேள்வியெழுப்பிய நபரை தாக்கிய பாஜகவினர் !