DMK

தி.மு.க-வில் இணைந்தார் டாக்டர்.மகேந்திரன்... “தி.மு.க தொண்டனாகச் செயல்படுவேன்” எனப் பேச்சு!

மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன், தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்து கொண்டார்!

மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவராக இருந்து விலகிய டாக்டர் ஆர்.மகேந்திரன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகியாக இருந்த பத்மபிரியா உள்ளிட்ட பலரும் தி.மு.க-வில் இணைந்தனர்.

மகேந்திரனுடன் 78 பேர் தங்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைத்துக் கொண்டுள்ளனர். இந்நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும்,தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இளைஞரணி செயலாரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்ட ஆர்.மகேந்திரன், “தி.மு.கவில் இணைந்தது மகிழ்ச்சி; தி.மு.கவின் கொள்கைகளே எனது சித்தாந்தமாக இருந்தது. தி.மு.க-வின் தொண்டனாகச் செயல்படுவேன்” எனப் பேசினார்.

புதிதாக கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால் கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியைப் பெற்றிருப்போம் என்றுதான் தோன்றுகிறது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக தி.மு.கவுக்கு வந்துள்ளனர்" எனப் பேசினார்.

Also Read: இன்று தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்... மக்கள் பணியால் வலுப்பெறும் கழகம்!