DMK

எதிலும் முதன்மை... கலைஞர் ஆட்சியின் சாதனைகளும் சீரிய திட்டங்களும்! : மகுடம் சூடிய தி.மு.க -2

அரசியல் இராஜதந்திரியும், நிர்வாகத்துறையில் முத்திரை பதித்தவரும், சமூக நீதிக் காவலருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை, 19 ஆண்டுகள் தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக இருந்து நிறைவேற்றிய நல்ல பல திட்டங்களால், இயற்றிய பல சட்டங்களால் தமிழ்நாடு மிகவும் முன்னேறி பல துறைகளில் இந்தியாவிலேயே மிகச் சிறந்து விளங்கி முதலிடம் பிடித்து சாதனைகள் பல புரிந்துள்ளது. சில துறைகளில் பன்னாட்டு அளவிலும் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு முதலிடம் பிடித்து சாதனைகள் படைத்தது.

சென்னை மாநகராட்சியின் மேயராக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக பதவி வகித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு சாதனைகள் புரிந்து தமிழக அரசிற்கு தேசிய அளவில் சிறந்த விருதுகளையும் பாராட்டுகளும் கிடைக்க வழிவகுத்தார். சென்னை மாநகராட்சியை இந்தியாவின் தலைசிறந்த மாநகராட்சியாக ஆக்கி முன்னுதாரணம் படைத்தார். பெருமுயற்சி எடுத்து பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட வழிவகுத்து தமிழ்நாட்டின் தொழில்வளம், வணிகம், வேலைவாய்ப்பு பெருகிட தலைவர் அவர்கள் பெரிதும் காரணமாக விளங்கினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்தி சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுத்தும், மெட்ரோ ரயில் திட்டம் போன்ற என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தியும் தமிழ்நாடு அரசுக்கு பெருமை சேர்த்த மாண்புமிகு திமுக தலைவர் தளபதி அவர்களின் நற்பணிகளால் தமிழக தி.மு.க அரசு பல துறைகளில் தேசிய அளவில் முதலிடம் வகித்து விருதுகளும் பாராட்டுகளும் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தது. அந்த சாதனைமிகு பெருமைகளில் சில மட்டும் இக்கட்டுரையில் தரப்படுகின்றன.

தரமான சாதனைகளால் பன்னாட்டு அளவிலும் தேசியஅளவிலும் தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழகம் முதலிடம் வகித்த பெருமைமிகு தகவல்களுடன் தி.மு.க ஆட்சிக் காலத்தில் பன்னாட்டு அளவிலும் தேசிய அளவிலும் முதன்முதலாக தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும் முதன்முதலாக துவங்கப்பட்ட நிறுவனங்கள் பற்றியும் பெருமைமிக்க தகவல்கள் சேகரிக்கப்பட்டு பயனுள்ள வகையில் இக்கட்டுரையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் முதலிடம் : 2000-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் கரும்பு உற்பத்தியில் அகில இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் தமிழ்நாடு முதலிடம் வகித்தது. 2006-2011 தி.மு.க ஆட்சியில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் மட்டுமல்ல ஆசியா கண்டத்திலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

1989-1991 திமுக ஆட்சியில் மென்பொருள் ஏற்றுமதியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது.

1989-1991 திமுக ஆட்சியில் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் திருப்பூர் நகரம் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றது.

1989-1991 திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு முதலிடம் பெற்றது.

திமுக ஆட்சியில் நெல் காய்கறி உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகித்தது.

விவசாய உற்பத்தித் திறனில் 1989-1991 திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகித்தது.

1989 -1991 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கதர் மற்றும் கிராமத் தொழில், சிறு தொழில்களில் வேலைவாய்ப்புகள் வழங்குவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றது.

2006-2011ல் திமுக ஆட்சியில் உணவு உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகித்தது.

திமுக ஆட்சியில் பொருளாதார வளம் மிக்க மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றது.

திமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலன் காப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக இந்தியத் தொழில் குழுமம் (CII) அறிவித்து தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.

2000 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அரிசி மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகித்தது.

முந்திரி விளைச்சலில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகித்தது.

திமுக ஆட்சியில் விதை மாற்று விகிதாச்சாரத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகித்தது.

திமுக ஆட்சியில் 1998ஆம் ஆண்டு தொழில் துறையில் கடன் வைப்பு நிதி விகிதாச்சாரத்தில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது

திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம்: 1977-1988 எம்.ஜி.ஆர்.ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் பத்தாவது இடத்திற்கு சென்றது.

1989-1991 திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடம் பெற்றது.

1991-1996 ஜெயலலிதா ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் ஆறாவது இடத்திற்குச் சென்றது.

1996-2001 கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது.

2001-2006 ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவில் ஐந்தாவது இடத்திற்கு சென்று விட்டது.

2006-2011 முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் முன்னேறி தமிழ்நாடு இந்தியாவில் மீண்டும் முதலிடத்தைப் பெற்று மறுபடியும் சாதனை படைத்தது.

2011க்குப் பிறகு அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு மிகமிக பின் தங்கிய இடத்திற்கு சென்று விட்டது.

திறமையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டதற்காக தமிழக ஊராட்சித் துறை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கிய முதல் பரிசினையும் ரூ.1கோடி ரொக்க பரிசினையும் 2007-2008ம் ஆண்டு தமிழக ஊராட்சித்துறை பெற்றது

ஆசியக் கண்டத்திலேயே கால்நடை பல்கலைக்கழகம் 1990-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்தில் துவங்கப்பட்டது.

ஆசியாவின் முதல் வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1990 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கோவையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆசிய கண்டத்திலேயே முதன்முறையாக தேசிய உடல் ஊனமுற்றோர் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டது.

தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் முதன்முதலில் துவங்கப்பட்ட திட்டங்கள்

இந்தியாவிலேயே முதன்முதலாக கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முறையாக 1970-ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் தி.மு.க. அரசால் குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக 1970 ஆம் ஆண்டு விமானம் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக ஆதிதிராவிடர் இலவச வீட்டு வசதி கழகம் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 15-2-1974-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் நில உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவிலேயே முதல் முதலாக போலீஸ் கமிஷன் திமுக அரசால் தமிழகத்தில் நியமிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு காவல்துறை கணினி மயமாக்கப்பட்டது

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் பள்ளி கல்லூரிகளில் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக பூம்புகார் கப்பல் கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் தான் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு 05.03.1997 அன்று அறிமுகப்படுத்தியது.

இந்தியாவிலேயே முதன்முதலாக பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் கணினி மயமாக்கப்பட்டு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு உலகில் எங்கும் உள்ள மக்கள் தங்களது சான்றிதழ்களை இலவசமாக படி எடுக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.

இந்தியாவின் முதல் சட்ட பல்கலைக்கழகம் 2-9-1997 அன்று தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுவது போல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் தொகுதி வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலில் தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அரசு விடுமுறை நாளாக தமிழ்நாட்டில்தான் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் திமுக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளின் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் தமிழ்நாட்டில் தமிழக அரசால் 1990ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் கிராமப்புற குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக அரசும் தனியாரும் இணைந்த கூட்டு துறை தொழில் வளர்ச்சி முறை தமிழ்நாட்டில் 1996-2001 திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முறையாக திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மகளிர் தொழில் பூங்காக்கள் ஐந்து இடங்களில் ஏற்படுத்தப்பட்டன.

இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 2007 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக அரசால் அமைக்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 1989 ஆம் ஆண்டு ஏழைகளுக்கு இலவச அரிசி வேட்டி சேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கு அரசு பணியில் 30 சதவீத இட ஒதுக்கீடு திமுக அரசால் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் கடல்சார் பல்கலைகழகம் சென்னை உத்தண்டியில் ஆரம்பிக்கப்பட்டது. இப்படி பல திட்டங்களை தமிழகத்தில் முதன்முதலாக ஆரம்பித்த பெருமை திமுக அரசுக்கு உண்டு.

- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.

Also Read: உலக அளவில் கலைஞர் அரசு பெற்ற விருதுகளும் பாராட்டுகளும்! : மகுடம் சூடிய தி.மு.க -1