திருச்சி சிவா
DMK

“நல்லது நடக்குமாயின், மக்கள் குரலை கேட்கும் அரசு அமைய வேண்டும்” - டெல்லியில் திருச்சி சிவா பேட்டி!

மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட மசோதாக்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. விவசாயிகளை ஆதரித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், டெல்லியில் உள்ள தனது வீட்டின் முன்பு மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து திருச்சி சிவா பேசியதன் விவரம் பின்வருமாறு:-

“இடைத் தரகர்களிடமிருந்து விவசாயிகளைக் காப்பாற்றுகிறோம் என்று கூறும் அரசு மொத்தமாக அதானி போன்ற பெரு முதலைகளின் பிடியில் விவசாயிகளை சிக்க வைத்துள்ளது.

வேளாண் மசோதாக்களை எதிர்ட்சிகளின் கோரிக்கையை ஏற்று தேர்வுக்குழுவுக்கு அனுப்பி மூன்று மாதம் ஆய்வு செய்திருந்தால் அதிலுள்ள குறைபாடுகளை களைந்திருக்கலாம். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரலை நசுக்கிவிட்டு சட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது.

Also Read: “இனி நாட்டில் விற்பதற்கு எதுவும் மிச்சமில்லை” - மோடி அரசை பகிரங்கமாக சாடிய திருச்சி சிவா !

லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்தை மதிக்காமல் கார்ப்பரேட்களுக்காக இந்த சட்டத்தை அரசு நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரை நம்பியிருந்தோம். ஆனால், அவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மக்களின் குரலை கேட்கும் அரசு அமைந்தால்தான் இந்த நாட்டிற்கு நல்லது நடக்கும்.

குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மசோதாவை நிறைவேற்றியதாகக் கூறி ஜார்கண்ட் மாநில அரசைக் கலைத்த பா.ஜ.க அரசு தற்போது முக்கியமான மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்கட்சிகளின் குரலை நசுக்கிவிட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.” எனக் கூறியுள்ளார்.

Also Read: “தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: பாஜக, அதிமுக அரசுகளுக்கான சாவு மணி” - கே.பாலகிருஷ்ணன் பளீர்!