DMK

கொரோனாவில் இருந்து மீண்ட முன்னாள் தி.மு.க அமைச்சர் ரகுமான்கான் காலமானார்!

தி.மு.கவின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக இருந்த ரகுமான்கானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கொரோனா தொற்று இல்லையென முடிவ வந்தால் ரகுமான்கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அதன் பிறகு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ரகுமான்கான் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆட்சியின் போது வருவாய், சிறுசேமிப்பு உள்ளிட்ட துறைகளில் பொறுப்பு வகித்தவர் ரகுமான்கான். இவர் 1977, 1980, 1984 ஆகிய மூன்று தேர்தல்களிலும் சென்னை சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு அபார வெற்றியை பெற்றவர்.

1989ல் சென்னை பூங்கா நகரிலும், 1996ல் ராமநாதபுரத்திலும் வெற்றி பெற்று 5 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

மேடை பேச்சுகளில் வல்லவரானவர் இவர். இப்படி இருக்கையில் அவரது மறைவு தி.மு.கழகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரகுமான்கானின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.கழக கொடிகளை அரைக்கம்பத்தில் 3 நாட்களுக்கு பறக்க விடுமாறும் தி.மு.க நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறும் தலைமைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: "பத்தாண்டுகால படுபாதாளத்தில் இருந்து தமிழகத்தை மீட்டாக வேண்டும்" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!