DMK

“கொள்கையில் உறுதி.. சட்டமன்றத்தில் சண்டமாருதம்.. இவைதான் ஜெ.அன்பழகன்” - திருச்சி சிவா புகழஞ்சலி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் கடைகோடி தொண்டர்கள் வரையில் மிகப்பெரிய சொல்லில் அடங்காத துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தலைவர்கள் பலர் தொடர்ந்து ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் அவரது செயல்பாடுகளை, துணிவுமிக்க பேச்சுகளையும் நினைவலைகளாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா, ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

“கொள்கையில் உறுதி, தலைமையிடம் விசுவாசம், மக்களிடையே தளராத தொண்டு, கழகத் தோழர்களிடம் அளவற்ற அன்பு, நண்பர்களிடையே தோழமை, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம், மேடைகளில் முரசொலி, சட்டமன்றத்தில் சண்டமாருதம் இவைதான் அருமை நண்பர் ஜெ. அன்பழகன்.

அவருடைய மறைவினால் அவர் சார்ந்த குடும்பம் தன் தலைவனை இழ்ந்திருக்கிறது. இந்த பேரியக்கம் ஒரு பலம் வாய்ந்த படைவீரனை, எங்கள் தலைவர் தளபதி ஒரு விசுவாசமுள்ள மெய்க்காப்பாளனை, கழகத் தோழர்கள் ஒரு பாதுகாவலனை, மக்கள் ஒரு நல்ல தொண்டனை, எங்களைப் போன்றோர் ஓர் அருமையான நண்பனை இழந்திருக்கிறோம். தலைநகர் கழகக் கோட்டையின் காவலனை, சட்டமன்றத்தில் துணிவோடு வாதம் செய்யும் வல்லவனை இழந்திருக்கிறது. மனம் ஏற்க மறுக்கும் நிகழ்வு நடந்து விட்டது.

அச்சமூட்டும் கொரோனா கிருமியிடமிருந்து பாதுகாப்பாய் இருந்திட வேண்டிய சூழலிலும் உடல்நலனை பொருட்படுத்தாது மக்கள் பசி தீர்க்க அல்லும் பகலும் உழைத்து, நோய் பாதித்து அரும்பாடுபட்டும் மீட்க முடியாத நிலையில் ஓர் ஆருயிர் தோழனை இழந்திருக்கிறோம். அசைந்தாடி வரும் அந்த நடை கண்முன்னே நிழலாடுகிறது.

ஜெ. அன்பழகன் “எல்லோரும் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்” என்ற வேண்டுகோளினை ஒரு மாவட்டக் கழகச் செயலாளரின் கடைசி அறிக்கையாக வெளியிட்டுவிட்டு ஒரு பாடமாக மறைந்து விட்டார். ஒருவருக்கு மற்றொருவர் ஆறுதல் சொல்ல இயலாத நிலை. தவிக்கிறோம். கண்ணீர் பெருகுகிறது. கைபிசைந்து நிற்கிறோம்!”

Also Read: #LIVEUPDATES : “தி.மு.கழகத்தின் துணிச்சல் மிக்க தூண் ஜெ.அன்பழகன்” - தலைவர்கள் இரங்கல்! #RIPAnbazhagan