DMK

“நாளொன்றுக்கு லட்சம் பேருக்கு உணவளிப்போம்” - ஊரடங்கால் வாடும் மக்களுக்காக மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், ஊரடங்கு காரணமாக அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள் சொல்லொனாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். வேலையில்லாமல், உணவு உண்ணாமல் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், சமூகநலக் கூடங்களிலும், பள்ளிகளிலும் பல்வேறு பகுதிகளில் அடைந்து கிடக்கிறார்கள்.

Also Read: சமூக சேவகராக மாறிய தி.மு.க மாவட்ட நிர்வாகி : வாழ்த்து மழை பொழியும் நாமக்கல் மக்கள்

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மக்களின் நலன் கருதி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் திட்டத்தைத் தொடங்கினார். அதன் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நேரடியாகச் சென்று நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவது போல, வீடற்றவர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் என பலருக்கும் உணவுகள் அளிக்கும் வகையில், ‘ஏழைகளுக்கு உணவளிப்போம்’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் கூறியிருப்பதாவது :

“கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் பசி போக்க நாம் தொடங்கிய ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் அளித்தாலும், சமைத்துச் சாப்பிடக் கூட இடமில்லை எனச் சிலர் சொன்ன செய்தி எனது இதயத்தை நொறுக்கியது.

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அளித்திடுவோம்” என பாரதியார் பாடினார். தனி ஒரு மனிதனும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக ‘ஏழைகளுக்கு உணவளிப்போம்’ எனும் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.

இத்திட்டம் மூலம் நாளொன்றுக்கு லட்சம் பேருக்கு உணவளிப்போம். பட்டினியில்லா சூழலை உருவாக்குவோம். இதற்காக 25 முக்கிய நகரங்களில் சமையல் கூடங்களை அமைத்து உணவுகளை வழங்கப்போகிறோம். பேரிடர் காலத்தில் உணவின்றித் தவிப்போருக்கு கொண்டு சேர்ப்போம்.

பசியில்லா சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்! ஒன்றிணைவோம்! உணவளிப்போம்! உதவிகள் செய்வோம்!”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Also Read: “என்ன செய்கிறது தி.மு.க?” - ஆளுங்கட்சியின் கேள்விக்கு இதோ இருக்கிறது பதில்! #DMKAgainstCorona