DMK

கொரோனா : சூழல் தெரியாமல் அலட்சியமாக செயல்படும் அரசுகள் - தரவுகளைக் கேட்கும் தி.மு.க எம்.எல்.ஏ!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தீவிரமாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குறிப்பாக, தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 738 ஆக உயர்ந்துள்ளது.

மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தபோதிலும் துரித நடவடிக்கை இல்லாதக் காரணத்தினால் மேலும் உயிர்பலி தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் அரசுகளின் செயல்பாடுகள் குறித்து தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மதுரை மத்தியத் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசினார்.

அப்போது, பிரதமர் மோடிக்கும், மாநில அ.தி.மு.க அரசுக்கும் நீங்கள் வழங்ககூடிய ஆலோசனை என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “மிகப்பெரிய அளவிலான, கொள்கை முடிவுகளை தாமதமான முறையில், குறைந்த அளவிலான திட்டமிடுதல், குறைந்த அவகாசம் அளித்தல் போன்ற காரணங்களால் நாம் எடுக்கும்போது எண்ணிய இலக்குகளை அடைவதில் தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

அதனால், எந்த ஒரு விசயத்தையும் நூறில் இருந்து பூஜ்ஜியத்திற்கும், பூஜ்ஜியத்தில் இருந்து நூறுக்கும் உடனுக்கு உடன் மாற்றுவது என்பது முடியாத காரியம். குறிப்பாக, முழுமையான ஊரடங்கு போன்ற அடையமுடியாத இலக்குகளை நோக்கி நம் செயல்பாடு இருந்தால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் தமிழகத்திலும், டெல்லியிலும் சமீபத்தில் கண்டோம்.

நாம் இந்த முயற்சிகளை சிறிது சிறிதாக மேற்கொள்ளவேண்டும். எடுத்தோம் கவிழ்ந்தோம் என்று முடிவுகளை எடுக்கமுடியாது. இந்த செயல்பாடுகளால் நாம் கொடுக்கும் பொருளாதார விலை மிகப் பெரியது. இந்த ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படும் மக்கள், உணவில்லாமல் தவிக்க நேரிடுகிறது. இது களத்தில் உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

எனது தொகுதியில் 2,400-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு பொருட்களை அளித்து வருகின்றேன். ஆனால் அதுபோதாது. எனவே இது மிகவும் கடினமான ஒரு முடிவு. இதற்கு தரவுகள் தான் தேவை. தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில் நேற்றைய தினம் 250 பேரை பரிசோதித்துள்ளனர்; ஒரு மூன்று லட்சத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் நடந்துள்ளது.

ஏனெனில், நம்மிடம் போதிய பரிசோதனை கருவிகள் இல்லை. நான் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஒரு விசயத்தை குறிப்பிட்டுள்ளேன். அதில், இறப்பு விகிதம் மற்றும் மருத்துவமனை சேர்க்கை தரவுகளை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

மேலும் மாவட்ட அளவில் முதல் நகர அளவில் வரை துல்லியமாக தரவுகளை கொண்டு நாம் ஆராய்ந்து பார்க்கமுடியும். பல இடங்களில் மருத்துவமனை சேர்க்கை தவறாகவும் வகைப்படுத்தப்படுகிறது. நிகழும் மரணங்கள் குறித்து நாம் ஆராய்ந்து பார்த்தால் எங்கு என்ன பிரச்சனை உள்ளது என்பது குறித்து நாம் உடனடியாக கண்டறிய முடியும்.

அதேபோல் ஊரடங்கின் தீவிரத்தன்மையை குறித்தும் நாம் ஆராய்ந்தால், இந்தியா தான் உலகிலேயே மோசமான நிலையில் உள்ளது. நாம் குறைந்த அளவில் நிதி ஆதாரங்களை ஒதுக்கியுள்ளோம். நீண்ட நாட்களுக்கு இந்த ஊரடங்கு நிலையை நீட்டிக்க முடியாது. அரசியல் காரணங்களுக்காக இந்த அரசாங்கத்திடம் பல தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக என் தொகுதியில் என்னிடம் உள்ள வாக்காளர் தரவுகளைக் கொண்டு வாக்குச்சாவடி வாரியாக மக்களை அணுகமுடிகிறது. அடுத்ததாக இரண்டாம் நிலை தரவுகளை பற்றி கூறும் போது, இந்த அரசாங்கத்திடம் மிகவும் ஏழமையாக உள்ளவர்கள் யார்? வெளிமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் யார் என்று தரவுகள் உள்ளன. யாருக்கு உடனடியாக உணவு பொருட்கள் தேவை என்பதில் இருந்து எத்தனை சிலிண்டர்கள் எடுத்துள்ளனர் போன்ற அனைத்து தரவுகளும் அரசிடம் உள்ளது.

இந்த ஊரடங்கு நீடிக்கும் பட்சத்தில், கையில் இருக்கும் தரவுகளை கொண்டு யாருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அவர்களுக்கு நிதி உதவிகளை அளிக்க வேண்டும். அதேபோல இறப்பு விகிதம் மற்றும் மருத்துமனை அனுமதி விவரங்களை, மாவட்ட கிராம அளவுகளில் ஆராந்து அதன் மூலமாக பகுதிவாரியாக படிப்படியாக ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறவேண்டும். செயல்பாடுகள் அனைத்து தரவுகளை கொண்டவையாக இருக்கவேண்டும்.

Also Read: "நிர்வாகத் திறனற்ற ஆட்சியால் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்வு” : பழனிவேல் தியாகராஜன் MLA

பரிசோதனை தரவுகள் இல்லாத பட்சத்தில் மற்ற தரவுகளைக் கொண்டு மருத்துவமனை சேர்க்கை விவரங்களை கொண்டு நாம் செல்படவேண்டும். குறிப்பாக ஊரடங்கு உத்தரவை தளர்த்த நாம் தரவுகளை பயன்படுத்த வேண்டும். ஊரடங்கை தளர்த்த முடியாத இடங்களில் நிதியை நாம் தரவுகளைக் கொண்டு பகிர்ந்தளிக்கவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனா வைரஸ் புதிதல்ல; மருந்து தயாரிக்காமல் விட்ட அரசுகளின் தவறுகள்: ஆதாரத்துடன் விளக்கும் நோம் சாம்ஸ்கி