DMK
’ஸ்மார்ட் சிட்டிக்காக மதுரை தனது அடையாளமான தமுக்கம் மைதானத்தை இழக்கப்போகிறதா?’ - தங்கம் தென்னரசு உருக்கம்
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிக்காக மதுரை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தமுக்கை மைதானத்தை நவீன அரங்காக மாற்றம் செய்ய தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அதற்காக 45 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு வளாகம் அமைக்க மதுரை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மேலும், மார்ச் 15ம் தேதி முதல் தமுக்கம் மைதானம் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அம்மாவட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல நூற்றாண்டு காலமாக இருக்கும் இந்த தமுக்கம் மைதானத்தை நவீனமயமாக்குவதற்கு சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., ஃபேஸ்புக்கில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
அதில், “தமுக்கம்! மதுரையின் வரலாற்றோடு தன்னைப் பின்னிப் பிணைத்துக்கொண்டப் பெருவெளி.
ராணி மங்கம்மாள் காலத்தில் விளையாட்டுப் போட்டிகளையும், விலங்குகளுக்கு இடையேயான சண்டைகளையும் கண்டு களிக்கும் வகையில் உப்பரிகையுடனும், வளைவுத் தூண்கள் தாங்கி நிற்கும் விதானத்துடனும் அமைக்கப்பட்ட ஒரு மாளிகையினை ஒட்டி அதன் பொருளை உணர்த்தும் தெலுங்குச் சொல்லான “ தமுகமு” என்ற பெயரில் உருவாகி பின்னர் தமுக்கம் என்றானதாகக் கருதுகிறார்கள்.
1764 ல் ஆங்கிலேயத் தளபதி மேஜர் காம்ப்பெல் மதுரைக் கோட்டையை முற்றுகையிட்டபோது, அன்றைய தமுக்கத்தின் ஒருபகுதியில் படைப்பிரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
காலந்தோறும் காட்சிகள் மாறினாலும் அதன் மெளன சாட்சியாக மாறாமல் இன்று வரை நின்ற தமுக்கம் மைதானத்தோடு மதுரை வாசிகளின் உறவு அலாதியானது. தனிப்பட்ட வகையில்,
1975 ம் ஆண்டு தமுக்கத்தில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டிற்கு அம்மாவோடு போன நினைவும், தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக அதில் பங்கேற்ற நிகழ்வும் இன்னமும் நினைவில் இருக்கின்றது.
அதன் பின் எத்தனையோ நிகழ்ச்சிகள்...எண்ணற்ற நினைவுகள். இன்றைக்கு “ ஸ்மார்ட் சிட்டி” காகத் தன்னை இழக்கிறது தமுக்கம். நான்கு வழிச்சாலைகளால் மரங்கள் மறைந்து போனது.நகரமயமாக்கலினால் இப்போது மைதானமே மறையப் போகிறதாம்.
மதுரையின் பாரம்பரிய அடையாளம்- சுவாசப் பெருவெளி- தமுக்கம் அழிந்துவிடாமல் காக்கும் கடமை நம் அனைவருக்கும் இருக்கின்றது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !