DMK

“வேளாண் மண்டலமாக அறிவிப்பது யார் செய்யவேண்டியது?” - விவசாயிகளை ஏமாற்றும் நாடகம் என மு.க.ஸ்டாலின் தாக்கு!

மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க செயலாளர் காரம்பாக்க்ம் கணபதி இல்லத் திருமண விழா இன்று காலை நடைபெற்றது. இத்திருமண விழாவில் பங்கேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

மேலும் பேசிய அவர், “இன்று செய்தித்தாள்களில் ஒரு செய்தியைப் பார்த்தேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னைப் போல எல்லோரும் பணியாற்ற வேண்டும் எனச் சொல்லியிருக்கிறாராம். அவரைப் போல பணியாற்றுவது என்றால் எப்படி? நாட்டில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, அக்கிரமங்கள் போலவா?

விவசாயி எனத் தன்னைத் தானே சொல்லிக்கொண்டு சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக விவசாயப் பெருங்குடி மக்களை துயரத்துக்குள்ளாக்கி வருகிறார். அவரைப் போல அனைவரும் நடந்துகொண்டால் இந்த நாடு குட்டிச்சுவராகிவிடும்.

எடப்பாடி பழனிசாமி 2 நாட்களுக்கு முன்னதாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறார். இது யாரை ஏமாற்றுவதற்காக? டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என இன்று நேற்றல்ல; தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. அப்பகுதி மக்கள் தொடர்ந்து அதற்காகப் போராடி வருகிறார்கள்.

வேளாண் மண்டலமாக ஆக்கினால் அது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். அதை வரவேற்கிறோம். ஆனால், அதை யார் அறிவிக்க வேண்டும் என்கிற சராசரி அறிவு கூட அ.தி.மு.க அரசுக்கு இல்லையே? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டியது மத்திய அரசு.

இதற்கே இங்கு பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது கெஜட்டில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும். அதற்கான நிதியை மத்திய அரசே வழங்கவேண்டும்.

ஏற்கனவே 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை என்னாகும்? அந்தப் பணிகளை நிறுத்திய பிறகு, வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கமாட்டோம் என உறுதியளித்த பிறகு, மத்திய அரசுதான் வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளதா? அதை முதலமைச்சர் வெளிப்படையாகச் சொல்வாரா?

பாராளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று மக்களவையில் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார். மாநில அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என வினவியிருக்கிறார். அதற்கு மத்திய அரசு எந்தப் பதிலும் சொல்லவில்லை. மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி இதுகுறித்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கும் மத்திய அரசு விளக்கமளிக்கவில்லை.

அமைச்சர் ஜெயக்குமார் டெல்லிக்குப் போய் ரகசியமாக ஒரு கடிதம் அளித்திருக்கிறார். அது எது தொடர்பான கடிதம் எனச் சொல்லவுமில்லை. முறைகேட்டு வழக்குகளில் சிக்கியிருக்கும் நிலையில் அதிலிருந்து தப்பிப்பதற்காக அனுப்பியிருக்கும் கடிதமா என்பதும் தெரியவில்லை.

நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. இக்கூட்டத்தொடரில் இதுகுறித்து கேள்வி எழுப்பவிருக்கிறோம். நாடாளுமன்றத்திலும், உள்ளாட்சியிலும் பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகளை ஏமாற்றும் நோக்கில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

உண்மையாகவே, சரியான வழிமுறையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால் நாங்கள் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். நீட் தேர்வுக்கும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால், நீட் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆக, வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தாலும் அதைச் செய்யவேண்டியது மத்திய அரசு. அதற்காக, மத்திய அரசை வலியுறுத்த இந்த அரசுக்கு அருகதை கிடையாது. மண்டியிட்டு ஆட்சி செய்துகொண்டிருக்கும் அடிமை எடப்பாடி பழனிசாமி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் வந்துகொண்டிருக்கிறது.” எனப் பேசினார்.

Also Read: ஆளுநரை வலியுறுத்தி எழுவர் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!