DMK

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுங்கள் - இலங்கை பிரதமரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழுவினர் இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேற்று (13.09.2019) சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இரு நாட்டு மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கோரிக்கை விடுத்ததார். இருவருடனான சந்திப்பில் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படும்போது அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. எனவே, அவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

படகுகள் விடுவிக்கப்படாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, இது தொடர்பான சட்டத்தைத் தளர்த்தி, படகுகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். அதேநேரம், இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார். முன்னதாக இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதாராச்சியை கனிமொழி நேற்று முன்தினம் சந்தித்தார்.