DMK

நீட் விலக்கு மசோதாவை நிராகரித்தது கூட்டாட்சி விரோத செயல் : திருச்சி சிவா பேச்சு!

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை மத்திய நிராகரித்ததற்கு கண்டனம் தெரிவித்து, மாநிலங்களவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீட் தேர்வு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய தி.மு.க எம்.பி., திருச்சி சிவா, நீட் தேர்வு மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடப்பதால் மாணவர்களுக்கு தேர்வு கடினமாக உள்ளது என்றும், கோச்சிங் சென்டருக்கு சென்று படிக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்வாகின்றனர் எனவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தி.மு.க-வின் ஆதரவால் தமிழக சட்டமன்றத்தில் இரண்டு முறை, நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சட்டப்பூர்வமான அந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கூட்டாட்சிக்கு விரோதமான செயல்” எனவும் திருச்சி சிவா குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இருந்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதேபோல, நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையிலும் தி.மு.க எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.