DMK

தி.மு.க-வில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன்!

ஆண்டிப்பட்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.ம.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்தவருமான தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமல்லாது, அவரது ஆதரவாளர்களும் தி.மு.கவில் இணைந்தனர். கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.கவில் இருந்து இன்னும் பலர் தி.மு.க-வில் இணைய உள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய தங்க தமிழ்ச்செல்வன், தமிழக மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் தலைவராகவும், ஆளுமைமிக்க தலைவராகவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். இதற்கு நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளே சாட்சி என தெரிவித்தார்.

விரைவில் தேனி மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளேன். அதன் மூலம், மாற்றுக் கட்சியில் இருந்து பலர் தி.மு.கவில் இணைவர் என்றார்.