DMK

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் 108 மருத்துவ மாணவர்களின் கனவு நிறைவேறியது 

தி.மு.கவின் முயற்சியில் மருத்துவக் கல்வியை தொடர முடியாமல் தவித்த 108 மாணவ - மாணவியரின் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது!

காஞ்சிபுரம் மாவட்டம், மணமைநல்லூரில் செயல்பட்டு வந்த‘பொன்னையா இராமஜெயம் மருத்துவக் கல்லூரி’யில் மருத்துவக் கல்வி பயில சேர்ந்த மாணவர்கள் கல்லூரி மூடப்பட்டதன் காரணமாக, கல்வி தொடர இயலாத நிலை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட 108 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் "பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு பத்து நாட்களுக்குள் மாற்றிட இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு முன்மொழிவுகள் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென" 13.12.2018 அன்று உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு இன்று வரை பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்காததால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம், பாதிக்கப்பட்ட மாணவர்களும் - அவர்களது பெற்றோர்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், 108 மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவர்களுக்கு உடனடியாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் - சுகாதாரச் செயலாளருக்கும் - தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தருக்கும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது அறிவுறுத்தலின்படி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., அவர்கள் எழுதிய மனுவினை, தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம், எம்.எல்.ஏ., அவர்கள் 22-1-2019 அன்று நேரில் அளித்து, 108 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்திட வலியுறுத்தினார்.

தி.மு.கவின் இந்த கோரிக்கையை ஏற்று108 மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.