Cinema
மலையாள சினிமாவில் பாலியல் ரீதியான தொல்லை... பதறவைக்கும் அரசின் விசாரணை அறிக்கை வெளியீடு !
கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல நடுகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரபல நடிகர் திலீப் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் கேரளாவை தாண்டி இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மலையாள திரைப்பட உலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆய்வுசெய்ய 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் மூத்த நடிகை சாரதா, ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.ஆர். வல்சலகுமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து ஏராளமான நடிகைகள் உள்ளிட்ட சினிமா துறையில் உள்ள பெண்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தொடர்ந்து 233 பக்கம் கொண்ட அந்த அறிக்கை கடந்த 2019 டிசம்பரில் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களும் இருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது அந்த அறிக்கையி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் என்றும், மலையாளத் திரைப்பட உலகம் மாபியா பிடியில் சிக்கி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு பெண்களை வற்புறுத்துவதாகவும், ஒத்துழைப்பவர்கள், ஒத்துழைக்காதவர்கள் என்று முத்திரை குத்தி படவாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் கூறப்பட்டுள்ளது.
மேலும்,. பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு பெண் வாய் திறந்தால், அவர் பிரச்சினைக்குரியவராக கருதப்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்பதால் அவர்கள் மவுனம் காக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நடிகைகள் உள்ளிட்டோரின் புகார்களை விசாரிக்கவும், குறைகளை தீர்ப்பதற்கும் சுதந்திரமான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதில் அரசு அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் இந்த அறிக்கை அரசை வலியுறுத்தியுள்ளது. இந்த அறிக்கை கேரள சினிமா துறையை தாண்டி இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !
-
“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” : கலைஞர் பாணியில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாணவி தற்கொலை வழக்கு : அம்பலமான பா.ஜ.க.வின் கலவர அரசியல் - முரசொலி!
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!