Cinema
“அமைச்சர் PTR கொடுத்த விளக்கத்தை பாருங்கள்” - இந்தி திணிப்பு குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலடி!
பிரபல பாலிவுட் இயக்குநரான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் 'அந்தாதூன்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் இவர், அடுத்து இயக்கியுள்ள படம்தான் 'மெரி கிறிஸ்துமஸ்'. விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு (2023) கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
அதன்படி வரும் ஜன 12-ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது, "நான் நடித்த '96' படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ஸ்ரீராம் என்னை தொடர்பு கொண்டார். அவரின் முதல் படம் (Ek Hasina Thi) என்னுடைய பிறந்தநாள் அன்று தான் வெளியானது. அப்போது என் நண்பர் ஒருவர் இதனை கூறினார். அந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்போதே இவர் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.
அப்போது அவர் 'மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் கதையை கூறியதுமே எனக்கு பிடித்திருந்தது. இந்த படத்தில் நடித்து இன்னும் 4 நாட்களில் வெளியாகவுள்ளது. நான் ஏற்கனவே துபாயில் வேலை பார்த்தபோது இந்தி மொழி கொஞ்சம் தெரியும். அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தி கற்று கொண்டு, படத்திற்கும் நானே டப் செய்தேன்." என்றார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டாம் என்று நிலைப்பாடு இருந்து வருவதாக கூறி, பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்டென்று பதிலளித்த விஜய் சேதுபதி, இந்த கேள்வியே முதலில் தவறு என்று சுட்டிக்காட்டி கண்டித்தார். மேலும் "இந்த கேள்வியை தான் அமீர்கானிடமும் கேட்டீர்கள் இந்த கேள்வியே தவறு.
இங்கு யாரும் இந்தியை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை; திணிக்க வேண்டாம் என்பதை தான் சொல்கிறோம். இந்தி படிப்பதற்கும், திணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்தி மொழி இப்போதும் பலர் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் படிப்பதை யாரும் தடுக்கவில்லை. இந்த கேள்விக்கு நம்ம அமைச்சர் பி.டி.ஆர் சார் ஒரு விளக்கம் கொடுத்திருப்பார். அதை பாருங்கள்..." என்றார்.
Also Read
-
அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த "தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டம்": முக்கிய முடிவுகள்! - முழு விவரம்!
-
தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகமாக பசுந்தேயிலை... 16 தேயிலை விவசாயிகளுக்கு தலா ரூ.25,000!
-
தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 : “இதுதான் நமது அடுத்த Target” - முதலமைச்சர் பேசியது என்ன?
-
5 ஆண்டுகளில் தமிழ்நாடு வேளாண்மையில் புரட்சி… திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்!
-
200 மகளிர் தங்கும் வகையில் ரூ.21.02 கோடியில் 4 தோழி விடுதிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!