Cinema

3 சுற்று.. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட விஜயகாந்தின் உடல் !

தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். மதுரையைச் சேர்ந்த இவர், 90-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி அரசியலில் கால்பதித்த இவர், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற நிலையில், இதனால் 2011 - 2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

அதன் பின்னர் இவரது உடல்நிலை பாதிப்பால் அரசியலில் சற்று விலகி இருந்தார். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சையிலிருந்து வந்த அவருக்கு கொரோனா மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த விஜயகாந்த் உடலுக்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், இந்திய சினிமா பிரபலங்களும், கட்சி தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்தின் இறப்புக்கு பலரும் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை சென்னை தீவுத்திடலில் இவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து பூந்தமல்லி வழியாக கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக அலுவலகத்துக்கு நல்லடக்கம் செய்வதற்காக இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

வழிநெடுகிலும் மக்கள் விஜயகாந்த் உடலுக்கு மலர்தூவி கண்ணீருடன் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேமுதிக அலுவலகம் வந்த விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் மரியாதையை செலுத்தினர். அதோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு மரியாதை செய்யப்பட்டது. ஒரு சுற்றுக்கு 24 என்ற கணக்கில் 3 சுற்றில் 72 குண்டுகளை காவல்துறையினர் வானோக்கி சுட்டு மரியாதை செய்தனர். இதையடுத்து இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Also Read: அஜித் குறித்து பதிவு... ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் செயலால் ரசிகர்கள் ஷாக் - நடந்தது என்ன?