Cinema

திடீரென வந்த மாரடைப்பு... இளம் வயதில் மாமன்னன் திரைப்பட உதவி இயக்குநருக்கு நேர்ந்த சோகம் !

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் தான் 'மாமன்னன்'. உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியான இந்த படம் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் சாதிய பாகுபாட்டை அரசியல் கலந்து இந்த படம் எடுத்துரைத்தது. இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். தொடர்ந்து இந்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. உதயநிதி, வடிவேலு, பகத் என அனைவரது நடிப்பையும் மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரிமுத்து என்பவர் தற்போது தனது 30 வயதில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருப்புளியன்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (30). திரைத்துறையில் நாட்டம் உள்ள இவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'கர்ணன்' படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருந்தார்.

இதையடுத்து கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கிய 'மாமன்னன்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அந்த படத்திற்கு தனது உழைப்பை செலவிட்ட இவர், மாமன்னன் திரைப்பட வெற்றிவிழாவில் கௌரவிக்கப் பட்டார். இந்த சூழலில் இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையி; அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைகாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மாரிமுத்துவுக்கு புகைபிடிக்கும் பழக்கம் அதிகளவில் இருந்ததால், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம் வயதில் உயிரிழந்த மாரி முத்துவின் மறைவுக்கு தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாரி முத்து ஒரு கதை எழுதி இயக்க ஆர்வமாக இருந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Also Read: “தரம் தாழ்ந்த மனநிலை வேண்டாம்...” - ஞானவேல் ராஜாவுக்கு நடிகர் பொன்வண்ணன் கண்டனம் !