Cinema

தவறாக பயன்பட்ட AI deepfake video : ஆபாசமாக பரவிய வீடியோ - பயமாக உள்ளதாக ராஷ்மிகா வேதனை !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீட்டோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதிலிருந்து இணைய உலகம் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் Artificial Inteligence-ஐ பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, ஒடிசா செய்தி தொலைக்காட்சி ஒன்று சாதனை படைத்தது. இப்படி AI தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சில இடங்களில் பண மோசடி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடந்து வருகிறது.

தொழில்நுட்பம் வளர்ச்சி என்பது மனிதனின் வளர்ச்சிக்கு பயன்படும் என்று எண்ணிய சூழல் போய், தற்போது இந்த AI தொழில்நுட்பத்தால் மக்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல வேலைகளை செய்துவிடலாம், அதற்கு மனிதரும் அதன் மூளையும் தேவையே இல்லை என்ற நிலைமை வந்துவிடும், இதனால் வேலை திண்டாட்டம் ஏற்படும் என்று பலரும் பல வித கருத்துகளை முன்வைகின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற "காவலா.." பாடலுக்கு காஜல், சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் நடனமாடுவது போல் AI-ஐ பயன்படுத்தி வீடியோக்களும் வெளியானது. இதனை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆச்சயர்த்துடன் கண்டு ரசித்தாலும், மற்ற சிலர் அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.

அதோடு கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சில நடிகர்களிடம், அவர்கள் உடல், முகத்தை பயன்படுத்தி AI தொழில்நுட்பம் மூலம் படம் செய்வதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த சம்பவத்திற்கு அங்கிருக்கும் திரைத்துறையை சார்ந்த சங்கங்கள், எழுத்தளார்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்தியாவில் கூட சில நடிகர்களை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்திகள் வெளியாவதற்கு நடிகர் அமிதாப் பச்சான் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகாவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது நடிகை ராஷ்மிகாவின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், பிகினி ஆடையில் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், தற்போது அந்த வீடியோ போலி என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த வீடியோவானது பிரிட்டிஷ்-இந்தியப் பெண் ஒருவருடையது என்றும், அந்த வீடியோவில் இவரது முகத்தை வைத்து திரித்து வெளிப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ராஷ்மிகா தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு :

"இதைப் பகிர்வதில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இணையத்தில் பரவிவரும் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட DeepFake Edit வீடியோ குறித்து பேசுவதற்கு வருத்தமாக உள்ளது. தொழில்நுட்பம் இப்படி தவறாக பயன்படுத்தப்படுவதை பார்த்தால் மிகவும் பயமாக உள்ளது.

இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகராகவும், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால், இதனை எப்படி சமாளித்திருப்பேன் என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்பு, இது குறித்து தெரியப்படுத்த வேண்டும்!"

நடிகர்களுக்கே இப்படி ஒரு சூழல் இருக்கும் நிலையில், சாதாரண மக்கள், பெண்களை நினைத்து கூட பார்க்க முடியாது. மார்ஃபிங் இருந்த காலத்திலேயே பலரது அந்தரங்கத்துக்கும் பாதுகாப்பில்லாத சூழலில், தற்போது இதுபோன்ற விஷயங்கள் மேலும் அச்சத்தை கொடுப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்ற்னர்.

Also Read: அதிரடியாக வெளியேறிய பிரதீப்: போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்த கமல் : சூடு பிடிக்க ஆரம்பித்த ஆட்டம்!