Cinema

“இது கேவலமான செயல்..” - வெளியான அவதூறு செய்தி.. ஆவேசமான சாய் பல்லவி.. காரணம் என்ன?

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. பிறப்பால் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும், மலையாள நடிகையாகவே இவர் அறியப்படுகிறார். தமிழில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் தெரியவந்தார். தனது முதல் படத்திலேயே எக்கச்சக்க ரசிகர்களை குவித்த இவர் ஒரு நடனக்கலைஞர், மருத்துவர் ஆவர்.

மருத்துவம் ஒருபக்கம் இருந்தாலும், திரைத்துறையில் உள்ள ஆர்வத்தால் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தனது நடிப்பாலும், பண்பாலும் ரசிகர்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ள இவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'கார்கி' படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தற்போது தமிழில் அவர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த சூழலில் இந்த படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் சாய் பல்லவிக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக வதந்திகள் பரவ தொடங்கியது.

இந்த நிலையில், அதற்கு சாய் பல்லவி தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வதந்திகளைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. ஆனால் குடும்பத்தினரை போன்று இருக்கும் நண்பர்களைக் குறித்து அந்த வதந்திகள் இருக்கும்போது அதைப் பற்றி நான் பேச வேண்டியதாயிருக்கிறது.

எனது படத்தின் பூஜை விழாவில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை உள்நோக்கத்தோடு க்ராப் செய்து அநாகரிகமான நோக்கத்திற்காக பணத்தை பெற்றுக் கொண்டு பரப்பியிருக்கிறார்கள். எனது படம் குறித்த மகிழ்ச்சியான அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் தருணத்தில், இதுபோன்ற வேலையற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற செயல் முற்றிலும் கேவலமானது.” என்று குறிப்பிட்டு தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

Also Read: விழா மேடையில் பெண் தொகுப்பாளரிடம் அத்துமீறல்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்.. நடந்தது என்ன?