Cinema

விடாத சர்க்கரை நோய்.. காலை எடுக்க வேண்டிய நிலை: சண்டையை மறந்து தயாரிப்பாளருக்கு உதவிகரம் நீட்டிய விக்ரம்!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக அமைந்திருப்பவர்தான் பாலா. இவரது இயக்கத்தில் 3-வதாக வெளியான திரைப்படம்தான் 'பிதாமகன்'. கடந்த 2003-ம் ஆண்டு சூர்யா, லைலா, விக்ரம், தனம் சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய அளவு பெயர் பெற்றது.

இந்த படத்தை தயாரித்தவர்தான் வி.ஏ.துரை. எவெர்க்ரீன் மூவி இன்டெர்நேஷனல் (Evergreen Movie International) என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்திற்கு தயாரிப்பாளர் ஆனார். முன்னதாக சத்யராஜின் 'என்னமா கண்ணு', 'லூட்டி', சூர்யாவின் 'நந்தா', 'மாயாவி', ஆர்யாவின் 'நான் கடவுள்', விஜயகாந்தின் 'கஜேந்திரா' உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.

முன்னதாக பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இவர், இந்த படங்கள் தயாரித்தன் மூலம் எந்தவொரு லாபமும் கிடைக்கவில்லை. எனவே திரையுலகில் இருந்து சற்று விலகியே இருந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக இவர் சர்க்கரை நோயால் அவதிபட்டு வந்துள்ளார். மேலும் யாருமில்லாமல் சாலிகிராமத்தில் தனது நண்பர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சைக்கு பணமில்லாத காரணத்தால் தனக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று வீடியோ வாயிலாக கேட்டுக்கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இந்த வீடியோவை பார்த்து ரஜினி, கருணாஸ், சூர்யா என ஒரு சில திரை பிரபலங்கள் இவருக்கு மருத்துவத்திற்காக பண உதவி செய்தனர்.

இதில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு காலில் ஏற்பட்ட புண் சர்க்கரை நோய் காரணமாக அதிகமானதால் தற்போது காலை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் விக்ரம் துரைக்கு, தரமான செயற்கை காலை பொருத்துவதற்கு தேவையான பண உதவிகளை செய்துள்ளார்.அதுமட்டுமின்றி, அவரது செலவுக்கும் தனியே பணத்தை கொடுத்து உதவி புரிந்துள்ளார். மேலும் தேவையான உதவிகளை செய்வதாகவும் துரையிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து நடிகர் விக்ரமுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக 'பிதாமகன்' வெளியீட்டின்போது, விக்ரமுக்கு ரூ.25 லட்சம் கொடுக்காமல் தயாரிப்பாளர் துரை பிரச்னை செய்ததாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது அந்த விவகாரத்தையும் மறந்து விக்ரம் தாமாக முன்வந்து உதவிகளை செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ரூ.25 கோடியா?.. யாரோ உங்கள ஏமாத்துறாங்க..” : சமந்தாவின் கலகல REPLAYக்கான காரணம் என்ன ?