Cinema

“திப்புவின் வாழ்க்கை படமாகாது, அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்..” பின்வாங்கிய மோடி பட தயாரிப்பாளர்.. காரணம்?

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் சந்தீப் சிங் (Sandeep Singh). ஆரம்ப காலத்தில் துணை தயாரிப்பாளராக இருந்த இவர், பின்னர் 'அலிகார்' படம் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார். தொடர்ந்து `சரப்ஜித்', பிரதமர் மோடியின் வாழ்க்கை கதையான 'PM நரேந்திர மோடி' உள்ளிட்ட படங்களை தயாரித்து மேலும் பிரபலமானார்.

இந்த சூழலில் இவர் தற்போது Sahara India Pariwar- நிறுவனரான Subrata Roy-ன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கும் கதையை தயாரிக்கிறார். இதனிடையே முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதன் டீசரும் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. ஆனால் அது என்ன ஆனது என்று இதுவரை தகவல்கள் இல்லை.

இந்த சூழலில் சந்தீப் சிங், தான் திப்பு சுல்தான் பற்றிய வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு படத்தைத் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், திப்பு சுல்தானின் வாழ்க்கையை நமது பாடப் புத்தகங்களில் நல்லவர் போல் காட்டியிருப்பார்கள் என்றும், ஆனால் அவரது மறுபக்கம் யாருக்கும் தெரியாது என்றும், எனவே அவரது இருண்ட பக்கத்தை தனது படத்தின் மூலம் வெளிப்படுத்த விரும்புவதாக கூறினார்.

மேலும் இது இனி வரும் சந்ததிக்கு அவரது உண்மையான முகம் வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இருக்கும் எனவும் கூறினார். இவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வலுத்த கண்டனங்கள் இருந்து வருகிறது. அதோடு இவரது கருத்துக்கு வரலாற்று ஆசிரியர்களிடம் இருந்தும் இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் குவிந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை தான் கைவிடப் போவதாக சந்தீப் சிங், தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " திப்பு சுல்தான் படம் உருவாக்கப்படாது. என்னையும், என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மிரட்டுவதை தவிர்க்குமாறு சகோதர, சகோதரிகளாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் யாருடைய மனதையும், மத உணர்வுகளையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். இந்தியர்களாக நாம் ஒற்றுமையாக இருப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: KALKI 2898 AD: “அது என்னன்னே தெரியாது” - Glimpse வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கு அமிதாப் விளக்கம்