Cinema
இவ்ளோ பணத்தை வைத்து என்ன சார் செய்றீங்க ? -வீட்டுக்கு வந்த சக நடிகரால் சிக்கிய பிரபல காமெடி நடிகர் !
கடந்த 2016-ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதாக கூறி, இரவோடு இரவாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி, தங்களிடம் இருந்த பணத்தை ஏடிஎம்., வங்கி என வரிசையாக நின்று, சாப்பிடாமல் கூட மாற்றிக்கொண்டனர். இந்த நிகழ்வால் பொதுமக்கள் பலவகையில் துன்பங்களை அனுபவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக புது ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளை திரும்ப பெறப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது.
அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்ககளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.20,000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல தலைவர்கள், விமர்சகர்கள், இணையவாசிகள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து இதனை பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் மலைபோல் குவிந்திருக்கும் ரூ.2000 நோட்டுகள் படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மற்றொரு பிரபல தெலுங்கு நடிகரான வெண்ணிலா கிஷோரை குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டுக்கு சென்றபோது இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்து அவர் என்ன செய்வார்" என்று வேடிக்கையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து இது பெரும் சர்ச்சையானது. மேலும் இதற்கு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
கடந்த 20-ம் தேதி வெளியிட்ட இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், "கிஷோரை வைத்து நகைச்சுவைக்காக சொன்னதை சில புதிய ஊடகங்கள் தவறாக திரித்திருக்கின்றன. கிஷோருக்கும் எனக்கும் எப்போதும் இதுபோன்ற வேடிக்கையான விஷயங்கள் நடக்கும் என்பது பெரும்பாலும் அனைவருக்குமே தெரியும். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு இது நகைச்சுவை என்பது புரியும். இதை நகைச்சுவை என்று புரிந்துகொள்ளாதவர்களின் ஆன்மாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஷ்ணு மஞ்சு, அதன் பிறகு கடந்த 2003-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'விஷ்ணு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் இவர், ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
அதே போல் நடிகர் வெண்ணிலா கிஷோர் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். தெலுங்கில் முக்கிய காமெடி நடிகரான இவர் மகேஷ் பாபு, ராம் சரண், அல்லு அர்ஜுன், விஜய் தேவராகொண்டா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”சமூகநீதியை பறிக்கும் மோடியின் தனியார்மயம்” : ராகுல் காந்தி MP விமர்சனம்!
-
UPSC தேர்வில் பீடித்தொழிலாளி மகள் வெற்றி : இளைஞர்களுக்கு ஒளிவிளக்காக இருக்கும் நான் முதல்வன் திட்டம்!
-
”இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்து பொய் பேசும் மோடி” : ப.சிதம்பரம் கண்டனம்!
-
”மோடியின் பொருளாதாரக் கொள்கை அடிமைத்தனத்திற்கான பாதை” : பரகல பிரபாகர் கடும் தாக்கு!
-
பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை மறக்க முடியுமா? : அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா பதிலடி!