Cinema

அக்காவை தொடர்ந்து தங்கை.. “கார் சாவியை காணவில்லை” - காவல் நிலையத்தில் பரபர புகாரளித்த செளந்தர்யா ரஜினி !

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இருவருக்கும் திருமணமான நிலையில், இளைய மகள் செளந்தர்யா ரஜினி சிறந்த கிராபிக் டிசைனராக உள்ளார். தமிழில் முக்கியமான சில படங்களில் கிராபிக் டிசைனராக பணியாற்றியுள்ள இவர், ஒரு தயாரிப்பாளரும் ஆவார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'கோவா' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். மேலும் அவரது தந்தை நடிப்பில் அனிமேஷன் படமாக வெளியான 'கோச்சடையான்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட இவரது மற்ற சில படங்களுக்கு கிராபிக் டிசைன் செய்து கொடுத்து வருகிறார்..

தொடர்ந்து சினிமாவில் மட்டுமல்லாமல், வெளியில் சில இடங்களிலும் கிராபிக் டிசைனராக இருக்கும் இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளது.

இந்த நிலையில் இன்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு கார் சாவியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது தனது காரின் மற்றொரு சாவி பவுச்சுடன் காணாமல் போனதாகவும், அதனை விரைந்து கண்டுபிடித்து தருமாறும் குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டின் லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க, வைர நகைகள் திருடு போனதாக புகார் அளித்திருந்தார். அதனை விசாரிக்கையில், அவரது வீட்டின் பணிப்பெண், மற்றும் ஓட்டுநர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, 1 கோடி மதிப்பில் வீடு வாங்கி வாடகைக்கு விடப்பட்டிருந்தது அனைத்தும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த நகைகளை மீட்டனர். அப்போது ஐஸ்வர்யா ரஜினி அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்த அளவுக்கு அதிகமான நகைகளை மீட்டனர். எனவே இது தொடர்பாக ஐஸ்வர்யா ரஜினியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘இராவண கோட்டம் முதல் MS தோனி வரை..’ - இன்னும் 3 நாளில் வெளியாகும் அந்த 6 முக்கிய படங்கள் என்னென்ன ?