Cinema

“பொன்னியின் செல்வன் - 2 பாகத்திற்கு ‘பாகுபலி’தான் காரணம்..”- ஐதராபத்தில் ராஜமெளலியை பாராட்டிய மணிரத்னம் !

தமிழில் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியான திரைப்படம்தான் 'பொன்னியின் செல்வன் 1'. உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகிய இந்த படம் இந்தியாவில் பான் இந்தியா படமாக வெளியானது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், பார்த்திபன் என்று திரைபட்டாளமே நடித்துள்ளது.

பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் இருந்து உருவான இந்த கதையை, தமிழில் எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் என பல திரை கலைஞர்கள் படமாக எடுக்க முயன்றனர். இந்த நிலையில் நீண்ட விடா முயற்சிக்கு பிறகு மணிரத்னம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெளியாகி சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்கில் வெற்றிநடைபோட்டது.

சுமார் 500 கோடிக்கும் மேலாக வசூல் சாதனையை படைத்து கடந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக திகழ்ந்தது. முதல் பாகத்துக்கே படக்குழு ப்ரோமோஷனை வித்தியாசமாக செய்தது. எனவே இதன் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் 28-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னை, கோயம்பத்தூர், ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளல்ல நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஐதராபாத்தில் இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் இதில் பங்கேற்ற இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக உருவாக ராஜமெளலியின் 'பாகுபலி' தான் காரணம் என பேசியுள்ளர். இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்த விஷயத்தை நான் இதற்கு முன்பே சொல்லி இருந்தாலும் மறுபடியும் சொல்கிறேன். நான் ராஜமெளலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

ஏனென்றால் 'பாகுபலி' இரண்டு பாகங்களாக அவர் உருவாக்காவிட்டால் நானும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க முடியாது. இது எனக்கு புது பாதையை உருவாக்கி தந்தது. நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத்துறையில் பலருக்கும் கொடுத்தது. இதை அவரை சந்தித்தும் நான் சொல்லி இருக்கிறேன்

பாகுபலி போன்ற பிரம்மாண்டமான படத்தை உருவாக்கி அவர் ஹிட் கொடுத்ததால் தான், இன்று இந்தியா முழுவதும் பல பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகி வருகிறது" என்றார். இது தொடர்பான வீடியோவை பாகுபலி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மணிரத்னத்துக்கு அப்படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Also Read: மீண்டும் மேல்முறையீடு.. இயக்குநர் லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு !