Cinema

மீண்டும் மேல்முறையீடு.. இயக்குநர் லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு !

கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'ஆனந்தம்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, 'ரன்', 'ஜீ', 'சண்டக்கோழி', 'சண்டக்கோழி 2', 'பீமா', 'பையா' என பல படங்களை இயக்கியுள்ளார்.

சுமார் 4 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இவரது இயக்கத்தில் ராம் பொத்தனேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி உள்ளிட்டோர் நடிப்பில் அண்மையில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான திரைப்படம் தான் 'தி வாரியர்'.

இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில் உருவாக இருந்த "எண்ணி ஏழு நாள்" என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் நிதி பெற்றிருந்தது.

இதையடுத்து இந்த கடன்தொகையை திருப்பி செலுத்தவில்லை என்பதால், பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிவிபி நிறுவனத்துக்கு இயக்குநர் லிங்குசாமி கடன்தொகையை செலுத்த உத்தரவிட்டது.

பின்னர் லிங்குசாமியும் கடன் தொகையுடன் வட்டி தொகையும் சேர்த்து 1 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பினார். ஆனால் இயக்குநரின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தினால், அவர் அனுப்பிய காசோலை திரும்பி வந்தது. எனவே, பிவிபி நிறுவனம் இயக்குநர் லிங்குசாமி மீதும், அவரது சகோதரர் மீதும் சைதாபேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த நீதிபதி, இயக்குநர் லிங்குசாமிக்கு, அவரது சகோதரரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்கும் 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இயக்குநர் லிங்குசாமி மேல்முறையீடு செய்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த மோசடி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், லிங்குசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டும் என்றும், விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது.

இதையடுத்து லிங்குசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்தார். அதில் தாங்கள் ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 20% தொகையை செலுத்தியதாகவும், தற்போது மேலும் மீதமுள்ள தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் லிங்குசாமி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதி மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் 20% டெபாசிட் தொகை அளிக்கப்பட்ட நிலையில் மேலும் 20% டெபாசிட் தொகையை 6 வாரங்களில் செலுத்த நீதிபதி நிபந்தனை விதித்தார்.

Also Read: தொடரும் சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் மூழ்கிய கன்னட திரையுலகம் !