Cinema

இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை.. - மோசடி வழக்கில் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம் !

கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'ஆனந்தம்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, 'ரன்', 'ஜீ', 'சண்டக்கோழி', 'சண்டக்கோழி 2', 'பீமா', 'பையா' என பல படங்களை இயக்கியுள்ளார். இதில் சண்டைக்கோழி, பையா என சில படங்கள் வெற்றி கொடுத்தாலும் சிலவை சில தோல்வியை சந்தித்தது.

சுமார் 4 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு ராம் பொத்தனேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான திரைப்படம் தான் 'தி வாரியர்'. ஆனால் இந்த படமும் தோல்வியை தான் சந்தித்தது.

இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில் உருவாக இருந்த "எண்ணி ஏழு நாள்" என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் நிதி பெற்றிருந்தது.

இதையடுத்து இந்த கடன்தொகையை திருப்பி செலுத்தவில்லை என்பதால், பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிவிபி நிறுவனத்துக்கு இயக்குநர் லிங்குசாமி கடன்தொகையை செலுத்த உத்தரவிட்டது.

பின்னர் லிங்குசாமியும் கடன் தொகையான 1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பினார். ஆனால் இயக்குநரின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தினால், அவர் அனுப்பிய காசோலை திரும்பி வந்தது. எனவே, பிவிபி நிறுவனம் இயக்குநர் லிங்குசாமி மீதும், அவரது சகோதரர் மீதும் சைதாபேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த நீதிபதி, இயக்குநர் லிங்குசாமிக்கு, அவரது சகோதரரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்கும் 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இயக்குநர் லிங்குசாமி மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில், இந்த மோசடி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், லிங்குசாமியின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டும் என்றும், விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டுள்ளது இதனால் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: ”ஏப்ரல் 30ம் தேதி உனக்கு கடைசி நாள்”.. நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன்!