Cinema

“ஆங்கிலம் தெரியாது.. நேஷனல் சேனலில் என்னை அவமானப்படுத்தினார்..” - கரண் ஜோஹர் மீது கங்கனா குற்றச்சாட்டு !

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். இமாச்சல பிரதேசத்தை சொந்த ஊராக கொண்ட இவர், 2006-ல் இந்தி திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2008-ல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இது அவருக்கு ஐந்தாவது படமாகும்.

பெரும்பாலும் இந்தி படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் சில படங்கள்தான் நடித்துள்ளார். அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக் படமான 'தலைவி' படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ்நாட்டில் பெரிய விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக அடி வாங்கியது. தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். இவர் மறைமுகமாக பாஜக ஆதரவாளராக இருந்து வருவதால்தான் கடந்த 2020-ல் இவருக்கு இந்திய திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'பத்ம ஸ்ரீ' கிடைத்தாக பல விமர்சனங்கள் எழுந்தது. அது மட்டுமின்றி உண்மையை அறியாமல் தனது ட்விட்டரில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதே இவரது வழக்கமாகும். இதனாலே நெட்டிசன்கள் இவரை ட்விட்டர் பக்கத்தில் வறுத்தெடுப்பர்.

இந்த சூழலில் இவர் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு எதிராகவும் பல கருத்துகள் பதிவிட்டு வருவார். அந்த வகையில் டாப்ஸி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலருடனும் மோதல் இருந்து வருகிறது. அந்த வகையில் அண்மை காலமாக பிரபல இயக்குநர் கரண் ஜோஹருடனும் இவருக்கு மோதல் இருந்து வருகிறது. பாலிவுட்டில் பிரபல இயக்குநராக இருப்பவர் கரண் ஜோகர். இவர் தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று தன்னை அவமான படுத்தியதாக குற்றசாட்டை முன்வைத்துள்ளார் கங்கனா .

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு திரைப்பட விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோஹர், 'நான் அனுஷ்கா ஷர்மாவின் கரியரை முற்றிலும் முடக்க விரும்பினேன். ஆதித்யா சோப்ரா எனக்கு அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படத்தை படத்தைக் காட்டியபோது, ​​நான் 'இல்லை இவர் சரிவரமாட்டார். ஒப்பந்தம் செய்ய வேண்டாம்' அவருக்கு பதிலாக மற்றொரு நடிகை ஒப்பந்தம் செய்ய கோரினேன்' என்று கிண்டலாக பேசினார். அப்போது அவர் பக்கத்திலிருக்கும் அனுஷ்கா ஷர்மா சிரித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது.

இதையடுத்து இதற்கு விளக்கமளிக்கும் வகையில் கரண் ஜோஹர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தான் எதற்கும் பின்வாங்க கூடியவன் அல்ல என்றும், குறிப்பாக, பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து பேச தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கரண் ஜோகர் குறிப்பிட்டதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த கங்கணா தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் "ஒரு காலத்தில் நெப்போடிச மாஃபியாவைச் சேர்ந்தவர் எனக்கு ஆங்கிலம் சரிவர பேச தெரியாததால் தேசிய அளவிலான சேனல் ஒன்றில் என்னை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தினார். இன்று உங்கள் பதிவை பார்த்தபோது இந்தியில் நீங்கள் மேம்பட்டிருப்பது தெரிகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக பிரியங்கா சோப்ராவை பாலிவுட்டில் இருந்து விரட்டியடித்தது இயக்குநர் கரண் ஜோகர் என்றும், ஷாருக்கான் உடனான பிரியங்கா சோப்ராவின் நட்பின் காரணமாக அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற கரண் ஜோஹர் நினைத்ததாகவும் பாலிவுட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயலுக்கு கரண் ஜோஹர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தார். இந்த சூழலில் தற்போது மீண்டும் கரண் ஜோஹர் குறித்த இவரது கருத்து பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பட தலைப்பாக வைக்கப்பட்ட பாடல் வரி.. எதிராக போடப்பட்ட வழக்கு: நீதிமன்றம் வரை சென்று நீதிபெற்ற நடிகை ரம்யா!