Cinema

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்க, வைர நகைகள் மாயம்.. வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் !

சென்னையை சேர்ந்த பிரபல பாடகர்களில் ஒருவர்தான் விஜய் யேசுதாஸ். இவர், பிரபல பாடகர் KJ யேசுதாஸின் மகன் ஆவார். மலையாளத்தில் அறிமுகமான விஜய் யேசுதாஸ், 2002-ல் விஜய், சூர்யா, தேவயானி நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' படத்தில் இடம்பெற்ற "ருக்கு ருக்கு.." பாடலை பாடினார். ஜெயம் படத்தில் "கோடி கோடி மின்னல்கள்..", சண்டைக்கோழி படத்தில் "தாவணி போட்ட தீபாவளி.." என அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். பாடல் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் 2015-ல் வெளியான 'மாறி' படத்தில் அருண் குமார் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

நடிப்பில் ஆர்வம் வந்தாலும், தனது இசை பயணத்தை விடாமல் கெட்டியாக பிடித்திருக்கும் இவர் சில திரைப்படங்களின் நடித்து வருவதோடு, பாடலும் பாடி வருகிறார். இவர் பாடிய சில பாடலுக்காக மாநில விருதுகள், கேரள மாநில விருதுகள், சைமா என பலவற்றை வாங்கியுள்ளார்.

இந்த சூழலில் இவரது மனைவி பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை அபிராமிபுரம் பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார் விஜய் யேசுதாஸ். இந்த சூழலில் விஜய் யேசுதாஸின் மனைவி தர்சனா வீட்டில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணவில்லை என அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வீட்டின் லாக்கரில் வைத்திருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததாகவும், கடந்த மாதம் 18ஆம் தேதி நகைகளை எடுக்க சென்ற போது லாக்கரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன நகைகள் குறித்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 30ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டில் வேலை செய்யும் மேனகா, பெருமாள், சையத் ஆகியோர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறி பாடகர் விஜயின் மனைவி தர்ஷனா புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசாத் வழக்குபதிவு செய்து கைரேகை நிபுணர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் சந்தேகம் உள்ளதாக கூறப்பட்ட பணியாளர்களை அழைத்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 150-க்கும் மேற்பட்ட சவரன் நகைகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு வீட்டின் பெண் பணியாளர் மற்றும் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரைப்பட பாடகர் வீட்டில் திருடு போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கடா கறி பங்கு பிரிப்பதில் தகராறு.. மதுபோதையில் நடந்த கொடூரம் - நண்பர்கள் உட்பட 8 பேரை கைது செய்த போலிஸ்!