Cinema

பாஜக நிர்வாகி திரையரங்கில் நரிக்குறவ இன பெண்ணுக்கு நேர்ந்த அநீதி.. - சமூகநீதி பாடம் எடுத்த தமிழ் மக்கள் !

சிலம்பரசன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம்தான் 'பத்து தல'. ஓபிலி என். கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் இதற்காக நேற்று இரவில் இருந்தே திருவிழா போல் தியேட்டர் வாசலில் கொண்டாடிவருகின்றனர். அதிகாலை ஷோ ரத்து செய்து காலை 8 மணிக்கு இந்த படத்தின் முதல் ஷோ தொடங்கியது. இதற்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால் கடுக்க வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த சூழலில் சென்னை கோயம்பேடுவில் உள்ள ரோகினி தியேட்டரில் ரசிகர்களோடு ரசிகர்களாக குறவர் சமூகத்தை சார்ந்த பெண் ஒருவர் தனது பிள்ளைகளை கூட்டி டிக்கெட் எடுத்து பார்க்க வந்தார். அவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. பின்னர் அவர் உள்ளே செல்வதற்காக நின்றபோது, அவரிடம் இருந்து அங்கிருந்த திரையரங்கு ஊழியர் டிக்கெட்டை பெற மறுத்தார். மேலும் அவரை உள்ளே விட முடியாது என்றும் கறாராக நடந்துகொண்டார்.

ஊழியரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அங்கிருந்த ரசிகர்கள் குரலெழுப்பினர். இருப்பினும் அந்த ஊழியர் அவர்களை உள்ளே விட மறுத்தார். அதோடு அவர்களிடம் இருந்து டிக்கெட்டையும் வாங்காமல் வெளியவே நிற்க வைத்து சாதிய வேறுபாடு காட்டினார். இதனைத்தொடர்ந்து ஊழியரின் இந்த நடவடிக்கையை அங்கிருந்த ரசிகர்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வெளியாகி பலரும் ரோகினி தியேட்டர் மற்றும் ஊழியருக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சாதிய தீண்டாமைக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழக அரசு பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வரும் நிலையில், ஒரு திரையரங்கில் இப்படி நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற ரோகினி திரையரங்கம் தமிழ்நாடு பாஜகவின் இளைஞரணி தலைவராக இருக்கும் வினோஜ் பி.செல்வத்துக்கு சொந்தமானது ஆகும்.

சாதி, மத உணர்வுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பாஜகவினர் வாய்கிழிய பேசிக்கொண்டிருக்கும் சூழலில் ஒரு திரையரங்குக்குள் டிக்கெட் எடுத்து படம் பார்க்க நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது பலரது தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

அதோடு இதற்கு திரைக்கலைஞர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதோடு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரும் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரோகிணி திரையரங்கில் பணம் குடுத்து டிக்கெட் வாங்கிய நபர்களை படம் பார்க்க அனுமதிக்காமல் தீண்டாமை கொடுமையில் இடுபட்ட ஊழியர் மீது நடவடிக்கை தேவை. SOP - நிலையான செயல்பாட்டு நெறிமுறை மூலம் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு சொல்லி கொடுக்க தவறிய உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: FIFA டாப் 10 அணிகளுக்கு எதிராக அதிக கோல் அடித்தது மெஸ்ஸியா ? ரொனால்டோவா ? -வெளியான புள்ளிவிவரம் !