Cinema

“பிரியங்கா சோப்ராவை இங்கிருந்து விரட்டியடித்தது இவர்தான்..” - கங்கனாவின் பதிவால் பாலிவுட்டில் அதிர்வலை !

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் ஒருவர்தான் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் மூலம் முதல் முறையாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இதையடுத்து ஆங்கில படத்திலும் அறிமுகமான இவர், தொடர்ச்சியாக இந்தி படங்களிலே நடித்து வந்தார். இதையடுத்து இவர் பிரபல அமெரிக்கா பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து 2018-ல் திருமணம் செய்துகொண்டார். ஜோன்ஸை விட பிரியங்கா 10 வயது மூத்தவராக இருந்ததால், இந்திய ரசிகர்கள் கிசுகிசுத்து வந்தனர். தற்போது 40 வயதுடைய பிரியங்கா வாடகை தாய் மூலம் கடந்த ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

தற்போது மீண்டும் படங்கள், சீரிஸ்கள் நடித்து வரும் இவர் இணையத்தொடரிலும் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஆங்கில திரைப்படங்கள் மட்டும் நடித்து வரும் இவர், தற்போது 'Love Again' என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். மேலும் 'Citadel' என்ற ஹாலிவுட் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் ஆகியவற்றை இயக்கிய ரூஸ்ஸோ சகோதரர்களான (Russo brothers) ஜோ மற்றும் அந்தோணி ரூஸ்ஸோ இந்த தொடரை இயக்கியுள்ளனர்.

வரும் ஏப்ரல் 28-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'Citadel' தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதோடு இந்த தொடர் இந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்த சூழலில் அண்மையில் நடைபெற்ற தென்மேற்கு திரைப்பட விழா (SXSW) 2023-ல் அமேசான் ஸ்டுடியோஸ் தலைவர் ஜெனிபர் சல்கே உடன் நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது, தான் முதல் முறையாக ஆண் நடிகருக்கு இணையான ஊதியத்தைப் பெற்றதாக தெரிவித்தார். இவரது இந்த பேச்சு பாலிவுட்டில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் ஏன் பாலிவுட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "பாலிவுட் சினிமாவில் இருந்து நான் ஓரம் கட்டப்பட்டேன். பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. எனக்கு அங்கு நடந்த அரசியல் சரியாகபடவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது.

அப்போது எனது மேனேஜர் அஞ்சுலா ஆச்சாரியா எனது மியூசிக் வீடியோவை பார்த்து அமெரிக்காவில் இசைத்துறையில் பணியாற்ற உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார். பின் அமெரிக்காவில் இசைத்துறையில் பணியாற்றினேன். அடுத்த கட்டத்திற்குச் செல்ல அந்த இசை எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தது" என்றார்.

இவரது இந்த பேச்சு பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இவருக்கு ஆதரவாக நடிகை கங்கனா கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், பிரியங்காவை ஓரங்கட்டியது பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர்தான் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஷாருக்கான் உடனான பிரியங்கா சோப்ராவின் நட்பின் காரணமாக அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற கரண் ஜோஹர் நினைத்ததாகவும் பாலிவுட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயலுக்கு கரண் ஜோஹர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: காணாமல் போனதோ 60 சவரன்.. மீட்கப்பட்டதோ 100 சவரனுக்கும் மேல்.. தொடர் சிக்கலில் ஐஸ்வர்யா ரஜினி - பின்னணி ?