Cinema

“நா இத சந்தோஷமா சொல்றேன்.. பிளேட், டீ கிளாஸ்லாம் கழுவிருக்கேன்..” - மேடையில் ஏ.ஆர்.முருகதாஸ் எமோஷனல் !

தற்போது தமிழில் முன்னணி இயக்குநராக இருப்பவர்தான் ஏ.ஆர்.முருகதாஸ். ஆரம்ப காலத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட சிலரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், மதுரை மீனாட்சி, பூச்சிடவா ஆகிய படங்கள் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார்.

பிறகு 2001-ல் அஜித் நடிப்பில் வெளியான 'தீனா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், அந்த படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் அறியப்பட்டார். அந்த படம் அவருக்கு பெரிய ஹிட் கொடுக்கவே, அடுத்த ஆண்டே விஜயகாந்தை வைத்து 'ரமணா' படத்தை இயக்கினார். இன்றளவும் நின்று பேசும் படமாக இருக்கும் இந்த படம், மாபெரிய ஹிட் கொடுத்தது.

தொடர்ந்து 2 படங்கள் பெரிய ஹிட் கொடுக்கவே பெரிய அளவில் தமிழ் சினிமாவில் அறியப்பட்டார். சூர்யாவின் கஜினி, 7-ம் அறிவு, விஜயின் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என தொடர்ந்து படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஹிட் கொடுத்தவையாகவே அமைந்துள்ளது. இயக்குநராக மட்டுமின்றி, 2011-ல் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படம் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.

ஜெய், அஞ்சலி, ஷர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, 10 எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை தயாரித்த இவர், தற்போது 16 ஆகஸ்ட் 1947 படத்தையும் தயாரித்துள்ளார்.

என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் கெளதம் கார்த்திக், ரேவதி, புகழ், ரிச்சர்ட் ஆண்ட்சன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஏ.ஆர் முருகதாஸ் தனது அனுபவங்களை பேசினார். அப்போது பேசிய அவர், "இந்த உலகத்தில் Self made என்பதே மிகப்பெரிய பொய். தன்னிச்சையாக யாராலும் இங்கு வந்துவிட முடியாது என்பதுதான் உண்மை. 100 பேர் உதவி செய்தால்தான் ஒருவரால் வளர முடியும். நான் இப்போது இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் 100 பேர் எனக்கு கொடுத்த கை, 100 பேர் போட்ட பிச்சைதான் காரணம்.

இந்த படத்தை இயக்கிய பொன்குமார் எப்படி என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றினாரோ, நானும் அதே போல் பணியாற்றினேன். நான் கேரியரில் சாப்பாடு வாங்கிக்கொண்டு போகாத கடைகளே இல்லை. டீ கிளாஸை கழுவிருக்கேன்; பிளேட் கழுவிருக்கேன். 10 பேருக்கு ஒரே நேரத்தில் டீ கொடுத்து, அவர்கள் திருப்பி தரும் கிளாஸையும் கழுவிருக்கேன்.

அதன்பிறகு அவர்களுடன் சேர்ந்து டயலாக் எழுதிருக்கேன். இப்படிதான் நானும் வந்தேன். இதனை எல்லாம் நான் சந்தோசமாக தான் பண்ணேன்; கஷ்டமா பண்ணேன்னு சொல்லவே இல்ல. இப்படிதான் நம்மால் வரமுடியும். இந்த படத்திற்கு என்று முழு உழைப்பு பொன்குமார் உடையதுதான். வரும் ஏப்ரல் 7 முதல் பொன்குமார் உதவி இயக்குநர் இல்லை; அவர் ஒரு இயக்குநர். நல்ல விஷயங்களை எல்லாம் பாராட்டுங்கள். இந்த படம் ரொம்ப பிரமாதமாக இருக்கும்" என்றார்.