Cinema

போலி டாக்டர் பட்டமா? வடிவேலு, தேவா, கோபி-சுதாகர் என 40க்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஏமாற்றம்.. நடந்தது என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் திரை பிரபலங்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வானது, சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரபல பாடகர் தேவா, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர், நடன இயக்குநர் சாண்டி, நடிகர்கள் கோகுல், கஜராஜ், ஈரோடு மகேஷ் உள்ளிட்ட உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது இவர்கள் அனைவர்க்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நேரில் வரமுடியாத நடிகர் வடிவேலுக்கு நேரில் சென்று கௌரவ டாக்டர் பட்டத்தை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் வழங்கினார்கள். அதன் வீடியோ நேற்றைய தினம் இணையத்தில் வைரலானது. இது தொடர்பான செய்திகள் வெளியாகிய நிலையில், டாக்டர் பட்டம் வாங்கியர்களுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இது வைரலான நிலையில், தற்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம் போலி என நேற்று தகவல் வெளியானது.

இந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அப்படி ஒரு அமைப்பு இல்லை என்றும், மேலும் இந்த பட்டம் வழங்கும் விழாவின் அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரையும், அண்ணா பல்கலைக்கழகத்த பெயரும் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து பல்கலை., நிர்வாகிகள் இதுக்குறித்து விசாரித்தனர். அப்போது ஓய்வுபெற்ற நீதிபதி, இந்த நிகழ்வுக்கு தான் ஒரு விருந்தினராக மட்டுமே வந்ததாகவும், தனக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து விழா அமைப்பாளர்களின் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இதுகுறித்து விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், "கடந்த 26 -ம் தேதி கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் இன்டர்நேஷனல் ஆன்ட்டி கரப்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரில் நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்விற்கும் அண்ணா பல்கலைக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற நீதியரசர் கொடுத்த சிபாரிசு கடிதம் அடிப்படையில் விவேகானந்தா ஆடிட்டோரியத்தை வாடகைக்கு கொடுத்தோம்.

நீதியரசர் வள்ளிநாயகம் இந்த விவகாரத்தில் ஏமாந்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைப்பின் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளோம். சட்ட பூர்வமாகவும் இதை அணுக உள்ளோம். விருது வழங்கும் நிகழ்ச்சி என அரங்கத்தை வாடகைக்கு கொடுத்துவிட்டோம்.

பொதுவாக ஹோட்டல்களில் வைத்து இதுபோன்ற விருது நிகழ்ச்சிகளை தனியார் அமைப்புகள் நடத்துவது வழக்கம். ஆனால் பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது கண்டிக்கத்தக்க ஒன்று. இந்த நிகழ்வு அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெறுகிறது என்றும் நீதிபதி பங்கேற்கிறார் என்று எங்களிடம் அவர்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதற்காக நாங்கள் வருந்துகிறோம்.

இந்த நிகழ்விற்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நிகழ்ச்சி நடந்தது மதிய நேரத்தில்தான். அப்போது மாணவர்கள், ஆசிரியர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். பொதுவாக பல்கலைகழகத்தில் சில நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த நேரத்தில் அவர்கள் திட்டமிட்டு இந்த நிகழ்ச்சியை நடாத்தியுள்ளனர்.

தனியார் அமைப்பு சார்பில் கொடுத்த இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வில் பிரபலங்கள் உட்பட 40 பேர் வாங்கி ஏமாந்துள்ளனர்.ஆளுநர் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை இனி தனியாருக்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழகம் பெயரையும், இந்திய அரசின் முத்திரையும் தவறாக பயன்படுத்தியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை " என்றார். இந்த சம்பவத்தால் தற்போது திரையுலகிலும், பல்கலை வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்புடுத்தியுள்ளது.

Also Read: ‘இனி வெறும் வடிவேலு இல்ல.. டாக்டர் வடிவேலு’ - கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகருக்கு குவியும் வாழ்த்துகள்!