Cinema

“ரோஹித் ஷர்மாவுக்கு என்னைப்போல DANCE ஆடத் தெரியாது..” -வெளியான மீம்களுக்கு மிர்ச்சி சிவா கலகல பதில் !

தமிழ் சினிமாக்களில் காமெடி ஹீரோவாக நடிப்பது குறுகிய நடிகர்களே.. அந்த பட்டியலில் சந்தானம், வடிவேலு உள்ளிட்ட சிலர் இருக்கும் நிலையில், தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது மிர்ச்சி சிவா. 'தமிழ் படம்' என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து இவர் நடித்துள்ள அனைத்து படங்களும் காமெடி படங்களாகவே இருக்கும்.

சரோஜா, சென்னை 28, யா யா, வணக்கம் சென்னை, தமிழ் படம் 2 என பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெரும். அதைவிட இவரது நடனத்திற்கு அனைவரும் ரசிகர்கள் ஆவர். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம்தான் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'.

முழுக்க முழுக்க மொபைல் போன் வைத்தே எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் ஷா பி.என் இயக்கியுள்ளார். இதில் மிர்ச்சி சிவா, மெகா ஆகாஷ், பாடகர் மனோ, அஞ்சு குரியன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதன் ஸ்னீக் பீக், ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்ற நிலையில், இந்த படம் நாளை (பிப்., 24) திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ, தயாரிப்பாளர் பிரபு திலக், இசை அமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மிர்ச்சி சிவா, இந்த படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து பேசிய சிவா, "கொரோனா ஊரடங்கு நேரத்தில்தான் இயக்குநர் விக்னேஷ் ஷா இந்த கதையை என்னிடம் சொன்னார். போனில் அவர் சொன்னபோதே கதை எனக்கு பிடித்திருந்தது. எனக்கு இந்த படத்தில் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிப்பதாகவும் அவர் சொன்னார். ஆனால் படப்பிடிப்பின்போது எனது கையில் ஒரு மொபைல் போனை கொடுத்துவிட்டு, 'இதுதான் மெகா ஆகாஷ்' என்று சொன்னார்.

சரி படப்பிடிப்பின்போதாவது மெகா ஆகாஷை பார்க்கலாம் என்றால், என் கண்ணில் கூட காட்டவில்லை. சரி, இணைக்காவது வருவார் என்று நினைத்தால், அதற்கும் அவர் வரவில்லை. நா மெகா ஆகாஷை பார்த்ததே இல்லை" என்று கேலியாக பேசினார். தொடர்ந்து படப்பிடிப்பில் நடந்த நகிழ்வுகளை பகிர்ந்தார்.

பின்னர் அவர் பற்றிய மீம்கள் குறித்த கேட்கப்பட்ட கேள்விக்குக் பதிலளித்த அவர், "நான் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை. நீங்க ரோஹித் ஷர்மா பற்றி கேட்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா.. இந்திய அணியின் கேப்டன்.. அவரையும் என்னையும் ஒப்பிடாதீங்க. இப்போது நான் எதையாவது கூறினேன் என்றால் அதுதான் Thumbnail ஆக வரும்.

ரோஹித் ஷர்மா போல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது; என்னைப்போல் அவரால் டான்ஸ் ஆட முடியாது" என்று கலகலப்பாக பதிலளித்தார். இவரது பதிலால் அங்கு சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய அவர், "சென்னை 28-3 படம் எப்போது என்று வெங்கட் பிரபுவிடம் கேட்க வேண்டும்; அதே போல் தமிழ் படம் 3 எப்போது வரும் என்று அனைத்து இயக்குநர்களிடமும் கேட்க வேண்டும்..

இப்போது தானே KGF, அவதார் எல்லாம் வந்துள்ளது. இனி படங்கள் நிறைய வரவேண்டியிருக்கு. வந்ததும் பார்க்கலாம்" என்று நகைச்சுவையாக கூறினார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Also Read: விடிந்தது கூட தெரியாமல் காருக்குள் முரட்டுத் தூக்கம்.. கார் கண்ணாடியை உடைத்து எழுப்பிய வாகன ஓட்டிகள் !