Cinema

ரகசியமாக போட்டோ எடுக்க முயன்ற நபர்கள்.. ஆத்திரமடைந்த ஆலியா பட்: ஆதரவு தெரிவித்த பிரபலங்கள் -பின்னணி என்ன?

பொதுவாக சினிமா பிரபலங்கள் எங்கே சென்றாலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. மாறாக அவர்கள் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு பலபேர் புகைப்படம் எடுத்தும், அவர்களிடம் பேசியும் வருவர். இதனாலே அவர்களில் பலரும் பாதுகாப்பு வீரர்களுடன் வெளியில் வருவர். இவர்களுக்கு எந்த இடத்திற்கு சென்றாலும், எதாவது ஒரு தொந்தரவு இருந்துகொண்டே இருக்கும்.

மேலும் சிலர் அவர்கள் எங்கே சென்றாலும், அவர்களுக்கு தெரியமால் புகைப்படம் எடுத்து அதனால் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றுகின்றனர். இதனால் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு என்று பிரைவசி இல்லாமலே போய்விடுகிறது.

அந்த வகையில் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆலியா பட் இது போன்ற ஒரு புகாரைதான் இணைய வாயிலாக தெரிவித்துள்ளார். அதாவது நடிகை ஆலியா பட் அவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரை ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆலியா பட், இதுகுறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட பதிவில், "நான் மதிய நேரத்தில் எனது வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது யாரோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை போல் உணர்ந்தேன். உடனே நான் நிமிர்ந்து பார்க்கும்போது எனது வீட்டின் பக்கத்துக் கட்டடத்தின் மாடியில் இரண்டு நபர்கள் கேமராவை வைத்துக்கொண்டு என்னைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இதுபோன்ற செயல்கள் ஒருவரின் தனியுரிமையை ஆக்கிரமிக்கின்றன. எப்போதுமே உங்களால் கடக்க முடியாத லிமிட் என்ற ஒன்று உள்ளது. ஆனால் இன்று எல்லா லிமிட்டுகளும் எளிதாகக் கடக்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டு கண்டனம் தெறித்திருந்தார். அதோடு இதனை மும்பை போலீசுக்கும் டேக் செய்திருந்தார்.

இவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவருக்கு ஆதரவாகவும், இரகசியமாக புகைப்படம் எடுத்த நபர்களுக்கு கண்டனமும் தெரிவிக்கும் வகையில் பல பாலிவுட் பிரபலங்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் அர்ஜுன் கபூர் வெளியிட்ட பதிவில். "இது போன்ற செயல் முற்றிலும் வெட்கக்கேடானது. அவர் ஒரு பிரபலம் என்பதை மறந்து விடுங்கள். ஒரு பெண் தன் சொந்த வீட்டில் பாதுகாப்பாக உணரவில்லை என்றால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவரின் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பவர்கள் அது தவறான செயல் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் கரண் ஜோகர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், "பிரைவசிக்கு எதிராக நடந்த முற்றிலும் கேவலமான இந்த செயலுக்கு விளக்கம் என்று எதுவமே இல்லை. பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த அனைவரும் எப்போதும் ஊடகங்கள் மற்றும் paparazzi (தனிமுறை நிழற்படக் கலைஞர்களுக்கு) ஆளாகுகிறார்கள்.

ஆனால் அதற்கு என்று ஒரு வரம்பு இருக்கிறது. இது தங்கள் சொந்த வீட்டில் பாதுகாப்பாக உணரும் உரிமையைப் பற்றியது! இது நடிகர்கள் அல்லது பிரபலங்களைப் பற்றியது அல்ல, இது அடிப்படை மனித உரிமை." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து இதுகுறித்து நடிகை அனுஷ்கா ஷர்மா வெளியிட்டுள்ள பதிவில், " "இது போன்ற செயல்கள் நடப்பது முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கும் இதுபோன்று நடந்திருக்கிறது. எங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று பலமுறை கேட்டுக்கொண்டபோதும் அப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஆலியா பாட்டின் சகோதரி, நடிகை ஜான்வி கபூர் உள்ளிட்ட பலரும் ஆலியா பட்டிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது பாலிவுட்டில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: “ரோஹித் ஷர்மாவுக்கு என்னைப்போல DANCE ஆடத் தெரியாது..” -வெளியான மீம்களுக்கு மிர்ச்சி சிவா கலகல பதில் !