Cinema

டான்சர் ரமேஷை தொடர்ந்து பிரபல சீரியல் தமிழ் நடிகர் தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை உலகம் !

தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பொழுது போக்கிற்காக பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் 'காற்றுக்கென்ன வேலி' என்ற தொடர் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகி பெயர் 'வெண்ணிலா'. படிக்க வேண்டும் என்று கனவொவோடு இருக்கும் கதாநாயகியை வீட்டிலுள்ளவர்கள் திருமணம் செய்து கொடுக்க எண்ணுகிறார்கள்.

அதில் இருந்து தப்பித்து வெளியே வந்து தனது மேற்படிப்பிற்காக ஆசிரியர் ஒருவர் உதவியால் கல்லூரி படித்து வருகிறார். படிப்பில் மட்டும் இருந்த இவரது கவனம் காதலிலும் வரத் தொடங்கியது. காதல் - படிப்பு இந்த இரண்டையும் பேலன்ஸ் செய்து இரண்டிலும் வெண்ணிலா வெற்றி பெறுவாரா? என்ற கதையோடு தொடர் நகர்கிறது. இதனிடையே இவர் காணும் பிரச்னைகள் உள்ளிட்டவையை இந்த சீரியல் எடுத்துக்காட்டுகிறது.

இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியிலும், குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வழக்கமாக கல்லூரியில் நடக்கும் அதே மோதல்கள், நட்புகள், காமெடி உள்ளிட்டவை இந்த தொடரில் இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில் இந்த சீரியலில் ஹரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த தொடரில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஹரி. இவர் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம், அந்த சீரியல் குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது அறையில் தற்கொலை குறிப்பு எதுவும் இல்லை என்பதால், அவருக்கு கடன் தொல்லை ஏதேனும் இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சின்னத்திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மற்றொரு தனியார் தொலைக்காட்சி பிரபலமான டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் !

Also Read: “நான் கல்வி அமைச்சரானால்.. சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வேன்”-வாத்தி பட இயக்குநர் சர்ச்சை பேச்சு