Cinema

“சந்திரமுகியில் அவரை போல் நடிப்பது சாத்தியமற்றது..” - திடீரென ஜோதிகாவை புகழ்ந்த கங்கனா.. பின்னணி என்ன ?

மலையாளத்தில் ஷோபனா, மோகன்லால் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'மணிச்சித்ரதாழு'. இந்த படம் அங்கு பெரிய ஹிட் கொடுத்த நிலையில், இதனை தமிழில் இயக்குநர் பி.வாசு 'சந்திரமுகி' என்ற பெயரில் இயக்கினார்.

கடந்த 2005-ல் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வினீத், வடிவேலு, ஷீலா, நாசர், கே.ஆர். விஜயா, மாளவிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பாடலும் படமும் பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்த நிலையில், அப்போதே இதன் வசூல் 75 கோடி தாண்டி அள்ளிக் குவித்தது.

திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழகத்தில் சுமார் 890 நாட்கள் தியேட்டரில் திரையிடப்பட்டு பெரிய சாதனையை செய்தது. இன்றளவும் நின்று பேசப்பட்டு, ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு இதன் அடுத்த பாகம் வெளியாகவுள்ளது.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், வடிவேலு, ராதிகா, ரவி மரியா, சுபிக்‌ஷா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களும் அண்மையில் வெளியானது.

தொடர்ந்து இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதாவது, கங்கனா நடிக்கவுள்ள கதாபாத்திரம் முந்தைய பகுதியில் ஜோதிகா கதாபாத்திரமான 'கங்கா'வை விட அதிகம் பேசப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்காக கங்கானாவை படக்குழுவினர் அணுகியபோது, "சந்திரமுகி படம் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படம் அது" என்று கூறி, பாதி கதையை கேட்டே, படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கங்கனா இதில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தொடர்ந்து இதன் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது இது தொடர்பாக நடிகை கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது கடந்த 2019-ம் ஆண்டு, தனியார் YOUTUBE சேனல் ஒன்றுக்கு நடிகை ஜோதிகா பேட்டியளித்திருந்தார். அப்போது தங்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகை யாரென்று நெறியாளர் கேட்க, உடனே ஜோதிகாவோ "எனக்கு நிறைய இருக்குது. ஆனால் கங்கனா ரணாவத்" என்று பதிலலித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

அதனை ரீட்வீட் செய்த கங்கனா, அதனுடன் சேர்ந்து பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், "இது ஊக்கமளிக்கிறது, உண்மையில் சந்திரமுகியில் ஜோதிகாவின் சின்னச் சின்ன நடிப்பை நான் ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறேன், ஏனென்றால் க்ளைமாக்ஸை நாங்கள் படமாக்கி வருகிறோம். முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு வியப்பை அளிக்கக்கூடியது. அவருடைய நடிப்பை ஈடு செய்துவது சாத்தியமற்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகவும் வைரலாகவும் ஆகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய வகையில் இருக்கும் சந்திரமுகியின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து அதன் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ல் கங்கனா நடிப்பில் ஜான்சி ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாறு தழுவி எடுக்கப்பட்ட 'மணிகர்ணிகா' படம் வெளியானது. இந்த படத்தின் கங்னாவின் நடிப்பு இந்திய அளவில் பேசப்பட்டது. சந்திரமுகி படக்குழுவும் மணிகர்ணிகாவில் இவரது நடிப்பை பார்த்துதான் சந்திரமுகி படத்திற்கு இவரை அணுகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நாட்டு நாட்டு : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு Dance சொல்லிக்கொடுத்த ராம்சரண்.. வீடியோ வைரல் !