Cinema

#வாரிசு - #துணிவு.. நள்ளிரவு சிறப்பு காட்சிக்கு Okay சொன்ன புதுச்சேரி ஆட்சியர்.. ரசிகர்கள் கொண்டாட்டம் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள்தான் நடிகர் அஜித், விஜய். இவர்கள் இருவருக்கும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வேறு எந்த நடிகர்களின் ரசிகர்களும் அடித்துக்கொள்ளாத அளவிற்கு இந்த இருவரது ரசிகர்களும் மோதிக்கொள்வர்.

இவர்கள் இருவரது படங்களும் ஒரே நாளில் போட்டி போட்டு திரையரங்களில் வெளியானால் போதும், தமிழ்நாடே ரணகளமாக காட்சியளிக்கும் அளவிற்கு இருதரப்பு ரசிகர்களும் அலப்பறைகள் செய்வர். ஆனால் இருவரது படங்களும் திரையரங்கில் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் அடித்து விடும்.

இவர்கள் இருவரது படங்களும் நேருக்கு நேர் மோதுகையில் ரசிகர்களுக்கும் பெரிய மோதல் கூட வெடிக்கும். அந்த வகையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரது படங்களும் தற்போது நேருக்கு நேர் மோதவுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம்தான் 'வாரிசு'. தமன் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஜெய சுதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அதே நேரத்தில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம்தான் 'துணிவு'. ஜிப்ரான் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த இரு படங்களின் ட்ரைலர்களும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. பொங்கலை முன்னிட்டு வரும் 11-ம் தேதி (நாளை) தமிழகத்தில் இருக்கும் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவுள்ள நிலையில், இதன் டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நிறைவடைந்தது.

இந்த நிலையில் பார்க்கிங் மற்றும் படத்தின் டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம், உள்ளிட்ட விஷயங்களை ரசிகர்கள் செய்யக்கூடாது எனவும் தடை விதிக்கப்ட்டுள்ளது.

தொடர்ந்து புதுச்சேரியில் நள்ளிரவு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த நிலையில் புதுச்சேரியில் நள்ளிரவு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு மற்றும் துணிவு படங்களின் டிக்கெட் பதிவு தொடங்கியதில் இருந்தே தீவிரமாக விற்பனை செய்யப்பட்டது. எனவே இப்படங்களில் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதால் 1.30 மணி நள்ளிரவு காட்சிக்காக அனுமதி வழங்குமாறு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

தற்போது அவர்கள் கோரிக்கையை ஏற்று 3 திரையரங்குகளுக்கு மட்டும் சிறப்பு காட்சிக்கு புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read: வாரிசா ? துணிவா ?.. டாஸ் போட்டு தேர்ந்தெடுத்த திரையரங்கம்.. உறைந்துபோன ரசிகர்கள் ! வெற்றி பெற்றது யார் ?