Cinema

“பல பெண்களுடன் தொடர்பு..” -20 வயது நடிகை தற்கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட காதலன்.. நடந்தது என்ன ?

பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை துனிஷா ஷர்மா. 20 வயதாகும் இவர், நடிகை கத்ரீனா கைப் நடிப்பில் வெளியான Fitoor என்ற படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வந்த இவர், தனது முழு பணியையும் தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதில் செலவிட்டு வந்தார்.

இந்தி மொழியில் வெளியாகும் சில சீரியல்களில் நடித்து வந்த இவர், தற்போது 'அலிபாபா தஸ்தான் இ-காபூல்' என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடரின் படப்பிடிப்பு மும்பையை அடுத்த வசாய் என்ற பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பின் இடைவேளை சமயத்தில் துனிஷா அங்குள்ள சக நடிகரின் அறைக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார்.

அப்போது நீண்ட நேரமாகியும் துன்னிஷா வரவில்லை என்பதை அறிந்த குழுவினர், அந்த அறையின் கதவை தட்டினர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குளியலறையில் தூக்கி தொங்கிய நிலையில் இருந்துள்ளார் துனிஷா.

தனை கண்டு அதிர்ச்சியடைந்த குழுவினர், இதுகுறித்து உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கோராய்வுக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

விசாரணையில் நடிகை துனிஷா தற்கொலை செய்துகொள்ளும் முன்பு, அவரது நண்பர் ஒருவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இதற்கு முன்பே துனிஷா தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக கூறினர். தற்போது தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது துனிஷாவின் முன்னாள் காதலரும் நடிகருமான ஷீசன் கான் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் துனிஷாவும், இவரும் சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவருக்குள் அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டு வந்தள்ளது.

ஏனென்றால் டெல்லி ஷ்ரதா வழக்கினால் தான் பயந்துபோனதாகவும், அதோடு அவர்கள் இருவரது மதத்தையும், வயது வித்தியாசத்தையும் பார்த்தும் அவர்கள் உறவு குறித்து யோசித்து பின்னர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு தங்கள் காதல் உறவை முறித்து கொண்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த துனிஷா ஒருமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது ஷீசன் கான்தான் காப்பாற்றியுள்ளார். மேலும் இதுகுறித்து அவரது தாய்க்கும் தகவல் தெரிவித்து பார்த்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளதாக விசாரணையில் ஷீசன் கான் தெரிவித்துள்ளார்.

அதோடு இதுகுறித்து இறந்துபோன துனிஷாவின் தாய் மற்றும் மாமா கூறுகையில், "துனிஷாவும், ஷீசன் கானும் காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் காதல் உறவில் இருக்கும்போதே ஷீசன் கானுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. ஒருநாள் இந்த விவகாரம் துனிஷாவுக்கு தெரிய வர மனமுடைந்து காணப்பட்டார்" என்றனர்.

அதோடு தானும் ஷீசன் கானிடம் உறவு முறித்து கொண்டதை பற்றி கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை என்றும், அதனாலே தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் துனிஷாவின் தாயார் கூறினார்.

முன்னதாக துனிஷா கர்ப்பமாக இருந்ததாக எழப்பட்ட வதந்திகளுக்கு, தற்போது அவர் கர்ப்பமாக இல்லை என்று உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஷீசன் கான் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது 4 நாட்கள் போலீஸ் காவலில் ஒப்படைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நடிகர் ஷீஷன் கான், 'ஜோதா அக்பர்' படத்தில் இளம் வயது அக்பராக நடித்தவர். பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள இவர், துனிஷாவுடன் இணைந்து நடித்த போது கிசுகிசுக்களில் சிக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அது கொலை என கூறிய மருத்துவமனை பணியாளர்.. பகீர்!