Cinema

“‘பராசக்தி’ படத்தின் தாக்கம், இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் ஆனாலும் இருக்கும்..” - இயக்குநர் வெற்றிமாறன் !

‘பராசக்தி’ படம் என்றதும் நமக்கு சிவாஜிதான் ஞாபகம் வருவார். நீதிமன்ற காட்சி ஞாபகம் வரும். சிவாஜி என்ற மகத்தான நடிகனை கண்டெடுத்தது ‘பராசக்தி’ படம்தான் என்றாலும், அதன் கதை சிவாஜியை பற்றியது அல்ல. ‘கல்யாணி’ என்ற பெண் கதாபாத்திரத்தை பற்றியது. ஆணாதிக்கமும் அதற்கு துணை போகும் புரோகிதமும் எப்படி கல்யாணி என்ற பெண்ணை துன்புறுத்தி விரட்டுகிறது என்பதுதான் கதை.

கலைஞரின் கைவண்ணத்தில் உருவான இப்படம் 1952-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இந்தாண்டுடன் இப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. எனவே இதனை முன்னிட்டு இன்று சென்னையில் 'பராசக்தி' திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் விவாதம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன் மக்களின் எளிய பிரச்னைகளை, பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை சினிமாவின் மூலம் அன்றே பேசியிருக்கிறார் கலைஞர் என்று பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அரசியல் அதிகாரம் இல்லாத சமூக நீதி, மக்களுக்கு பெரிய பலனை கொடுக்காது என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார். பராசக்தி படத்தை மீண்டும் பார்த்த போது இதுதான் தோன்றியது. மக்களின் எளிய பிரச்சினைகளை, பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை சினிமாவின் மூலம் பேசி இருக்கிறார் கலைஞர்.

சினிமாவின் மூலம் மக்களிடம் அரசியலை பேசும் சூழலை உருவாக்கியுள்ளது பராசக்தி திரைப்படம். சமூக பொறுப்புடன் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நபர்கள் அனைவருக்கும் பிடித்த படமாக பராசக்தி இருக்கும். பராசக்தி படத்தின் தாக்கம், இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் இருக்கும். பராசக்தி படத்திற்கு அப்போதும் எதிர்ப்புகள் இருந்திருக்கும். நாம் ஒரு நம்பிக்கையுடன் ஒரு கருத்தை முன் வைக்கும்போது, எதிர்ப்புகள் வரும். அதனையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

Also Read: ‘பராசக்தி’ படம் வெளியாகி 70 ஆண்டுகள்.. இன்றும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே இருக்கும் கலைஞரின் வசனம்!