Cinema

சர்ச்சைகளை செவி சாய்க்காத ‘பதான்’ படக்குழுவினர்.. அடுத்த பாடல் வெளியீட்டு தேதி அதிரடியாக அறிவிப்பு !

பிரபல பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம்தான் 'பதான்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாகிவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் Besharam Rang என்ற பாடல் வெளியானது. தமிழில் 'அழையா மழை' என்ற பெயரில் இந்த பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த பாடல் முழுவதும் தீபிகா, பிகினி உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அதோடு அவர் ஆரஞ்சு கலர் துணியில் பிகினி உடை அணிந்துள்ளார். அதனை இந்துத்துவ கும்பல் தங்களது பெருமைக்குரிய காவி உடையை அவமதிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக அமைச்சர்கள், இந்துத்துவ கும்பல் பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அவர்கள் உருவப்படங்கள் எரிக்கப்படுவதும், திரையிட்டால் திரையரங்கை கொளுத்த நேரிடும் எனவும் வெளிப்படையாக பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்துத்துவ கும்பல் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் வெளிநாடுகள் ஷாருக் மற்றும் தீபிகாவுக்கு பல்வேறு அந்தஸ்துகள் வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது.

இதனால் இந்துத்துவ கும்பல் மேலும் அதிக பாதிப்புகளை கொண்டுள்ளதால் தொடர்ந்து வலுத்த கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர். இவர்களுக்கு பாஜக தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் திரை பிரபலங்கள் பலரும் தீபிகா, ஷாருக்கிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நடிகர் ஷாருக்க்கானும், "இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் பிற்போக்குத்தனமாக இயங்குகின்றன. மோசமான கருத்துகளை வெளியிடுகிறார்கள். அதில் வரும் எதிர்மறையான கருத்துக்கள் சினிமாவை பாதிக்கிறது. என்னை சுற்றி பல விஷயங்கள் நடக்கின்றன. ஆனாலும் நான் நேர்மறையாகவே இருப்பேன்.

எனக்கு எதிராக வரும் கருத்துகள் என்னை பாதிப்பது இல்லை. சமூக ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட குறுகிய பார்வையிலே இயங்குகிறது" என்றார். இவ்வாறு பேசிய அவர் 'பதான்' படம் என்று குறிப்பிடாமல் பேசியுள்ளார்.

இந்த நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடலை நாளை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதாவது இப்படத்தின் இரண்டாம் பாடலான 'Jhoome Jo Pathaan' என்ற பாடல் நாளை காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளது. தமிழில் 'Zoom Boom Doom Pathaan' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

Also Read: பதான் சர்ச்சை : “காவி உடை அணிந்து வன்கொடுமை செய்வது சரியா?” - இந்துத்துவ கும்பலுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!