Cinema

தொடர் சர்ச்சையில் சிக்கும் 'Kashmir Files' திரைப்படம் -நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரிய இயக்குநர்!

கடந்த மார்ச் மாதம் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த திரைப்படத்தை, வலதுசாரி அமைப்புகள் வெகுவாக பாராட்டுத் தெரிவித்து வரவேற்றன.

அதேநேரத்தில் வரலாற்றை திருத்தி அமைக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் இருப்பதாகவும், இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் மற்ற சில அமைப்புகள் குரல் கொடுத்தனர். சமீபத்தில் நடந்த கோவாவில் 53-வது சர்வதேச திரைப்பட விழாவில், சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழு தலைவரான நடாவ் லாபிட் “வெறுப்புணர்வைத்தூண்டும் மோசமான,இழிவான பிரச்சார படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்" என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த படத்தின் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பீமா கோரேகான் வழக்கில் யுஏபிஏ சட்டத்தின் கீழ் 70 வயதான சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகா கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கவுதம் நவ்லகாவை சிறையில் இருந்து எடுத்து வீடு காவலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது இந்த வழக்கில் நீதிபதி பாரபட்சம் காட்டியதாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ட்வீட் செய்திருந்தார்.

இது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக எடுத்து விசாரித்தது டெல்லி உயர்நீதிமன்றம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது விவேக் அக்னிஹோத்ரி நேரில் ஆஜரா ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் விவேக் அக்னிஹோத்ரி தனது மன்னிப்பை அவர் நேரில் தெரிவிக்க வேண்டும் என்றும், பதில் மனுவின் மூலமாகவே மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Also Read: சடலத்தின் உடலில் உயிரோடு சுற்றித்திரிந்த விஷப்பாம்பு.. பிரேத பரிசோதனை செய்தபோது அலறிய பெண் !