Cinema

வரி ஏய்ப்பு விவகாரம் : "AR ரகுமானுக்கு எதிராக ஆதாரம் உள்ளது.." - GST ஆணையம் பதில் மனுவால் பரபரப்பு !

பொதுவாக திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு வழங்கினால், GST வரியில் இருந்து விலக்கு பெறும் நடைமுறை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2019-ம் அண்டு பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக அந்தந்த பட தயாரிப்பாளர்களுக்கு வழங்காவில்லை என்று ரூ.6 கோடியே 79 லட்ச ரூபாய் (ரூ.6,79,00,000) சேவை வரி செலுத்த வேண்டும் என GST ஆணையர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து GST ஆணையத்தின் நோட்டீசை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் "எனது அனைத்து இசை படைப்புகளின் காப்புரிமைகளும் பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான்; அப்படி இருக்கையில் தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோத செயல்.

எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற குற்றசாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளது. நான் வரி ரூ.6,79,00,000 செலுத்தவில்லை என்று கூறி, ரூ.6,79,00,000 அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. எனவே இந்த வாழ்க்கை ரத்து செய்யவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், GST ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, GST ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படியிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. GST புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை செலுத்தாததால் தான் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் "தயாரிப்பாளர்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், விசாரணையின்போது அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தபோது இசை குறிப்புகளை மட்டும் ஏ.ஆர்.ரகுமான் வழங்கவில்லை என்பதும், அவர் இசையமைத்து, பாடலாசிரியர்கள், பாடகர்கள், கருவி கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவைகளை பயன்படுத்தி பதிவு செய்தார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே GST துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்" என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

Also Read: சிறைக்கு சென்ற தாய்.. மகள்களை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தை.. பஞ்சாபில் நடந்த கொடூரம்!