Cinema

"பணக்கஷ்டத்தால் தான் நான் நடித்தேன்: இனி அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்" -கர்ணன் பட நடிகர் உருக்கம் !

அண்மைக்காலமாக சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி போய் இருக்கின்றனர். அதில் முதன்மை வாய்ந்ததாக PUBG விளையாட்டு இருந்ததால், அதனை இந்திய அரசு தடை விதித்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக பார்த்தோமானால், அது ஆன்லைன் ரம்மில் சூதாட்டம் விளையாட்டு தான்.

சூதாட்டம் என்பது நமக்கு மட்டுமின்றி நம்மை சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு அரசு தடை விதித்திருந்தது. ஆனால் அண்மைக்காலமாக இந்த சூதாட்டம் ஆன்லைன் வழியாக பல மக்களின் வாழ்க்கைக்கும் நுழைந்துவிட்டது. இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பல மக்கள் கொலை, கொள்ளை, தற்கொலை என்று தனது நேர்கோட்டான வாழ்க்கையில் இருந்து திசைதிருப்பி போகின்றனர்.

இதனால் இதை தமிழ்நாடு அரசு தடை விதிக்க பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கை எழுந்த நிலையில், இதற்கு தடை விதிப்பதற்காக ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மும்முரமாக செய்து வருகிறது. இதனிடையே இது தொடர்பான விளம்பரத்தில் நடிக்க வேண்டாம் என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் சக நடிகர்களுக்கு கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், சண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் லால், தான் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து தவறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "'எனக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஊரடங்கின்போது அதிகமான பணக்கஷ்டம் ஏற்பட்டது. என்ன செய்வது என்று திகைத்து நின்று கொண்டிருந்த போது தான், ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அப்போதும் கூட நான் யோசித்தேன்.

ஆனால் அதில் நடிப்பதற்கு அரசு அனுமதி வழங்கி இருப்பதாக எண்ணி, நடித்தேன். ஆனால் இந்த விளம்பரம் மூலம் இவ்வளவு பெரிய பிரச்னை வரும் என்றோ ரம்மி விளையாட்டு பலரை தற்கொலைக்கு கொண்டு செல்லும் என்றோ நினைக்கவில்லை. ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்'' என்றார். இவரது பேச்சு பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.