Cinema

“குழந்தை போல மனசு.. அவரிடம் பேசினால் நேரம் போவதே தெரியாது..” - பிரதாப் போத்தனை பற்றி உருகிய சத்யராஜ் !

கேரள மாநிலம் திருவானந்தபுரத்தை சேர்ந்த பிரதாப் போத்தன், 1979 ஆம் ஆண்டு இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் வெளியான 'மூடு பனி' திரைப்படத்தில் "என் இனிய போன் நிலாவே" பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழில் பெரிதாக ஹிட் அடித்த 'மை டியர் மார்த்தாண்டன்', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்' போன்ற திரைப்படங்களை இவரே எழுதி, இயக்கியுள்ளார்.

தற்போது மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வரும் இவர், அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான 'பொன்மகள் வந்தாள்', விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்தும் வரும் நிலையில், 69 வயதாகும் இவருக்கு சமீபத்தில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த இவர், இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரை உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், திரை பிரபலங்கள், ரசிகர்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சத்யராஜ் இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "என் ஆரூயிர் நண்பர்.. மிக சிறந்த இயக்குநர்.. அற்புதமான நடிகர் பிரதாப் போத்தன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவருடைய இயக்கத்தில் 'ஜீவா', 'மகுடம்' ஆகிய இரு படங்களில் நடித்தேன். அதில் எனக்கு நல்ல பெயரும் கிடைத்தது.

அவருடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. குழந்தை போல மனசு, எப்போதும் சிரிச்சுகிட்டே இருப்பார். ஆனால் திடீரென அவர் இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் பலர், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also Read: “உப்பை தின்ற ஜெயக்குமார் விரைவில் தண்ணிக் குடிக்க போகிறார்": ஆர்.எஸ்.பாரதி பதிலடி!