Cinema

“ஆண் - பெண் உறவின் இயல்பான தன்மை எது ? - காதலுக்கு எது அவசியம்?” : ‘Munich’ படம் சொல்லவரும் கருத்து என்ன?

’பைசெப்ஸ்’ திடமாக வேண்டுமெனில் உடற்பயிற்சி செய்கிறோம். மனம் திடமாக இருக்க என்ன செய்கிறோம்?

Munich என்றொரு படம். Spielberg எடுத்த அருமையான படம். இஸ்ரேலிய உளவு அமைப்பான Mossad-ல் இருந்து ஒரு குழு பாலஸ்தீனர்களை கொல்ல அனுப்பப்படுவதே கதை.

அந்த குழுவின் நாயகனின் தலைமையில் பலர் கொல்லப்படுவர். அவன் தேடும் நபர்களை பற்றிய துப்புகளை ஒருவன் பணத்துக்கு கொடுப்பான். பல குண்டுவெடிப்புகள், பல துப்பாக்கிச்சூடுகள், உயிர்பறிப்புகள் நடத்தப்படும். பல உயிர்களை அழித்ததால் நாயகனுக்கு அகச்சிக்கல் ஏற்படும்.

துப்பு கொடுப்பவனிடம் ஒருநாள், தன்னை பற்றிய துப்பை அவன் யாருக்கேனும் கொடுத்திருக்கானா என நாயகன் கேட்பான். அதை பற்றி சொல்ல முடியாது என்பான் துப்புகொடுப்பவன். அன்றிலிருந்து அச்சமும் உயிர்பயமும் நாயகனை பீடித்துக்கொள்ளும்.

கண்ணசந்தாலும் கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தில் உறங்கவே மாட்டான் நாயகன். எந்த புது அறைக்கு போனாலும் படுக்கை, தொலைபேசி, தொலைக்காட்சி என எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து ஆராயாமல் தங்க மாட்டான். அவன் உடன் இருந்தவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக இறந்துபோவார்கள். ஒருவழியாக அவன் தன் நாட்டுக்கு திரும்புவான்.

பிரிந்திருந்த மனைவியையும் குழந்தையையும் சந்தித்த பிறகும் நிம்மதி பிறக்காது. குழந்தையை கொஞ்சினாலும் இயல்பாய் கொஞ்ச முடியாது. ஒரு கார் சாதாரணமாக கடந்தாலும் சந்தேகத்துடன் தான் பார்ப்பான். இரவில் தூங்கவே முடியாது. கொட்ட கொட்ட முழித்திருப்பான். அப்போதுதான் அந்த காட்சி!

அவன் தூங்காமல் மோட்டுவளையை வெறித்தபடி படுத்து கிடப்பதை மனைவி தூக்கக் கலக்கத்தில் பார்ப்பாள். அவன் பக்கம் திரும்பி அணைத்துக் கொள்வாள். அவன் முகம் பேயறைந்தது போல் இருக்கும். அவன் மேல் ஏறி படுத்து, வெறித்த அவன் கண்களை மூடி முத்தம் கொடுப்பாள். அவன் செய்த கொலைகள், அவன் அப்பா கொல்லப்பட்ட விதம் எல்லாம் நினைவுக்கு வரும். அவன் கீழே கிடக்கும் மனைவியை பார்க்காமல் வேறெங்கோ வெறித்தபடி புணர்ந்து கொண்டிருப்பான்.

அவன் பார்வையில் அவனின் கொடூரமான கடந்த காலம் நிழலாடிக் கொண்டிருக்கும். அதிலிருந்து தப்ப முடியாமல், வியர்த்து விறுவிறுத்து கண்ணீர் வழிய மிரட்சியோடு எச்சில் வடிந்து, அலறியபடி புணர்ந்து கொண்டிருப்பான். கீழே கிடக்கும் மனைவி கைகளை உயர்த்தி அவன் முகம் தடவி, கண்களை மூடுவாள்.

அப்போதுதான் அவள் பக்கம் அவன் தலை குனியும். அப்படியே நொறுங்கி விழுக, அவள் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொள்வாள். அவன் நெற்றியில் முத்தமிட்டு காதோரமாக சொல்வாள், "I love you" என. அவன் அவளை பார்த்து தேம்பியபடி நெஞ்சில் புதைந்துகொள்வான்.

இந்த காட்சியில் முழுவதுமாக உளவியலின் தந்தை எனக் குறிப்பிடப்படும் சிக்மண்ட் ஃப்ராய்டின் கோட்பாடுகள் வெளிப்பட்டிருக்கும். வன்மம் மீதான நேசம் என்பதே அடக்கிவைக்கப்படும் காமத்தின் வெளிப்பாடுதான் என்பார் சிக்மண்ட் ஃப்ராய்டு.

கலவி, காதல், உறவு ஆகியவற்றுக்கும் தனிமனித அகச்சிக்கல்களுக்கும் உள்ள தொடர்பு சாமானியமானது அல்ல. அவை மிக மிக சூட்சுமமானவை.

மனித சிந்தனையின் வன்மம், குரூரம், பழியுணர்ச்சி முதலியவற்றை மிக அழகிய ஒரு கலவிப்பொழுதில் அழித்துவிடலாம். கலவித் தேர்வுக்கான வாய்ப்புதான் காதல். காதலுக்கு அவசியம் ஆண்-பெண் உறவின் இயல்பான தன்மை. அதனால்தான் அதை மதங்களும், குடும்பங்களும், அரசுகளும் பூட்டி வைத்திருக்கின்றன.

Also Read: “தனிமையைப் போக்குவதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கிய ஜப்பான்” : எதனால் தெரியுமா ? - உண்மை காரணம் இதுதான்!