Cinema

”மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து.. யாருமே கண்டுக்க மாட்டுறாங்க”: பிரபல இயக்குநரின் பதிவால் பரபரப்பு!

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களிலும் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல மலையாள இயக்குநர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனல் குமார் சசிதரன் 'ஒழிவு திவசத்தே களி', 'செக்ஸி துர்கா' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகை மஞ்சு வாரியரை வைத்து Kayattam படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில்தான் இவர் மஞ்சு வாரியர் உயிருக்குச் சிலரால் ஆபத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து சனல் குமார் சசிதரன் வெளியிட்டுள்ள பதிவில், நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கந்து வட்டிக்கார்கள் காவலில் அவர் இருப்பதாக நான்கு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தேன்.

மேலும் அவரது வீட்டில், அவரின் மேனேஜர்கள் பினீஸ் சந்திரன், பினு நாயர் ஆகியோர் பெயர்கள் இருப்பதாகவும் நான் பதிவிட்டிருந்தேன். இதை பதிவிட்டு நான்கு நாட்கள் ஆகியும் மஞ்சு வாரியரோ அல்லது சம்மந்தப்பட்ட நபர்களோ யாருமே பதிலளிக்கவில்லை. இந்த மௌனம் இன்னும் எனது சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

இது குறித்து Women in Cinema Collective அமைப்பிற்கும் நேற்று மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் மௌனமாக இருக்கின்றனர். கேரள ஊடகங்களும் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளாததுபோல் இருப்பது அச்சமாக உள்ளது. இது குறித்து சமூகவலைதளத்தில் கூறினால், இந்த பிரச்சனையின் தீவிரத்தைப் பற்றிப் புரியாமல் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கின்றனர். தேசிய அளவில் பிரபலமான நடிகையின் சுதந்திரம் பற்றி தேசிய ஊடகங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த, நீண்ட பதிவை அடுத்து மலையாள சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா உலகத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இயக்குநரின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி நடிகை மஞ்சு வாரியருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: ’மைக்கை வீசி அநாகரிமாக நடந்து கொண்டேன்.. மன்னித்து விடுங்கள்..’ - இசை விழாவை பரபரக்க வைத்த பார்த்திபன்!