Cinema
சக்கரை, விக்ரம், வேதநாயகம் என மிரட்டலாக நடித்த சலீம் கவுஸ் காலமானார்: அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்!
‘வேதநாயகம்னா பயம்’ என விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய பழம்பெரும் நடிகரான சலீம் கவுஸ் தனது 70வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.
1989ல் கமல் நடிப்பில் வெளியான வெற்றி விழா படத்தில் தோன்றியிருந்தாலும் தமிழ் சினிமாவில் அப்போது பெரிதும் சோபிக்காமல் இருந்தார். பின்னர் 1992ல் வந்த சின்ன கவுண்டர் படத்தில் சக்கரை கவுண்டர் கதாப்பாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தார் சலீம் கவுஸ்.
அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்திலான திருடா திருடா படத்தில் வில்லனாக நடித்திருந்த சலீம் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
தமிழில் சில படங்களை நடித்திருந்தாலும், இந்தியில் பல படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் சலீம் கவுஸ். தமிழில் வந்த சொர்க்கம் நரகம் படத்தின் இந்தி ரீமேக்கான ஸ்வர்க் நரக் படத்தில் அறிமுகமான சலீம், பற்பல இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் படித்து பட்டம் படித்த இவர் புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் படித்திருந்தாலும் தொடக்கத்தில் சினிமா வாய்ப்பு எதுவும் அவருக்கு வாய்க்கவில்லை.
இருப்பினும், அதே கல்லூரியில் படித்த பஞ்சாபி பெண்ணான அனிதாவை காதலித்து மணமுடித்தார் சலீம். இருவரும் இணைந்து ஆங்கில நாடகக் குழுவை தொடங்கி அதில் சின்னஞ்சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தனர்.
ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ, மேக்பத் போன்ற நாடகங்களை லண்டனில் ஷேக்ஸ்பியரின் 400வது நூற்றாண்டின் போது நடித்து பலரது கைத்தட்டல்களை பெற்றார். வெள்ளித்திரையை காட்டிலும் நாடக மேடையில் மின்மினியாக ஜொலித்தார் சலீம் கவுஸ்.
சின்னத்திரை தொடர்களிலும் தலைக்காட்டி அதிலும் பிரபலமாகவே திகழ்ந்தார். மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வந்த சலீம் கவுஸ் மாரடைப்பு காரணமாக 70வது வயதில் மறைந்தார். அவரது இழப்பு செய்தி அறிந்த திரையுலகத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!