Cinema

அன்று இரும்பு பட்டறை தொழிலாளி.. இன்று KGF படத்தின் இசையமைப்பாளர்: யார் இந்த ரவி பஸ்ரூர்?

யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை உலகமே கொண்டாடி வருகிறது. திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஏற்படுத்த ரசிகர்களே வலியுறுத்தும் அளவுக்கு படத்தின் மீதான ஆவல் மேலோங்கியிருக்கிறது.

முதல் பாகத்தை திரையரங்கில் பார்க்க தவறியவர்கள், பல முறை முதல் பாகத்தை பார்த்தவர்கள் என ஏராளமானோர் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். இது போக படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக கேஜிஎஃப் 2 படத்தின் படத் தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னியின் பங்கு பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவருக்கு 19 வயது இளைஞரான இவர் எப்படி இவ்வளவு கச்சிதமாக ஒரு படத்தை எடிட்டிங் செய்தார் என்ற ஆச்சரியத்தில் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகமே ஆச்சரிய கடலில் மூழ்கியுள்ளது.

இந்த ஆச்சரியத்தில் இருந்து ரசிகர்கள் மீண்டு வருவதற்குள் இந்த படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பற்றி வெளியாகியிருக்கும் செய்தி ஒன்று மற்றுமொரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

கேஜிஎஃப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது இசை. தன் இசையால் படத்திற்கு கூடுதல் பிரம்பிப்பை ஏற்படுத்தியுள்ளார் ரவி பஸ்ரூர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இரும்புப் பட்டறையில் வேலை செய்துள்ளார் என்று சொன்னால் நம்மில் எத்தனை பேரால் நம்ப முடியும். ஆனால் அதுதான் உண்மை.

கர்நாடகாவில், குண்டாபுரா தாலுக்காவிலுள்ள ஒரு கிராமத்தில் எளிய குடும்ப பின்னணி கொண்டவர்தான் இந்த ரவி பஸ்ருர். தனது சிறு வயது முதலே இசையின் மீது இவருக்கு ஆர்வம் இருந்துள்ளது.

சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு தனது தந்தையின் இரும்பு பட்டறையில் தொழிலாளியாக சிற்பங்களை செய்து வந்துள்ளார். இவருக்கு கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலன்தான் முதல் முதலாக இசையமைக்க வாய்ப்பை கொடுத்துள்ளார்.

அவர் இயக்கிய 'உக்ரம்' என்ற படத்தில் தான் ரவி பஸ்ரூர் இசையமைப்பாளருக்கான தனது பயணத்தை துவங்கியுள்ளார். பிறகு அடுத்தடுத்து கன்னடப் படங்களை மட்டுமே இசையமைத்து வந்த இவரை கே.ஜி.எஃப் படம் உலக அளவிற்கு கொண்டு சேர்த்துள்ளது.

மேலும், சினிமாவில் இசையமைத்து வந்தாலும் தற்போதும் தனது தந்தையின் பட்டறையில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில்தான் அவர் தனது தந்தை பட்டறையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Also Read: KGF படக்குழுவின் அடுத்த அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்: 3 விருதுகளுக்கு தேர்வாகிய ‘புர்கா’!