Cinema

ஸ்டைலா.. கெத்தா.. : ரஜினி 169 பட அறிவிப்பை வெளியிட்ட சன்பிக்சர்ஸ் - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சிறுத்தா சிவா இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 168வது படமாக கடந்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக வெளியானது அன்னாத்த.

வழக்கம்போல 100 கோடிக்கும் மேலான வசூலை அன்னாத்த படம் பெற்றிருந்தது. இப்படி இருக்கையில் ரஜினியின் 169வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி சினிமா வாட்டாரங்களை அண்மைக்காலமாக பரபரப்புக்குள்ளாக்கியது.

அதன்படி கே.எஸ்.ரவிக்குமார், பால்கி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி என பலரது பெயர்களும் அடிபட்டது.

ஆனால் அந்த அனுமானங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் மாலை 6 மணிக்கு புதிய அறிவிப்பு வெளியாகிறது என ட்விட்டரில் பதிவிட்டிருந்தது சன் பிக்சர்ஸ்.

அந்த வகையில் 6 மணிக்கு வெளியான அறிவிப்பில், அன்னாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் 169வது படத்தையும் சன் பிக்சர்ஸே தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தை இயக்கப்போவது நெல்சன் திலீப்குமார் என்றும், அனிருத் இசையமைக்கப்போவதாகவும் வீடியோவாக வெளியிட்டுள்ளது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.